நேற்று விஜயபாஸ்கர்.. இன்று தம்பிதுரை.. நாளை ஓ.பி.எஸ்.. கலக்கத்தில் அதிமுக
Recommended Video
சென்னை: ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை விசாரணைக்காக ஆஜரானார். நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
முன்னாள் முதல் அமைச்சர் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் எழுப்பப் பட்ட நிலையில், அதுகுறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டது. அந்த ஆணையம், ஜெயலலிதாவின் பணியாளர்கள், சசிகலா தரப்பினர், அப்பல்லோ மருத்துவர்கள், செவிலியர்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோரிடம் விசாரணையை நடத்தியது.
சமீபத்தில், தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடமும் தொடர் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில், பொங்கல் பண்டிகை விடுமுறைக்கு பிறகு, நேற்று மீண்டும் விசாரணை ஆரம்பமானது.
ஆறுமுகசாமி ஆணையத்தில், மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆஜராகி விளக்கமளித்தார்.
8 மணி நேரத்திற்கும் மேலாக நடைபெற்ற விசாரணையில், அவரிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் குறுக்கு விசாரணை நடத்தினார்.
இந்நிலையில், லோக்சபா துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டிருந்தது.
அதற்காக, இன்று காலை 10.20 மணி அளவில், சென்னை எழிலகத்தில் உள்ள ஆணைய அலுவலகத்தில் தம்பிதுரை விசாரணைக்கு ஆஜரானார்.
சிகிச்சைக்காக ஜெயலலிதாவை வெளிநாடு கொண்டு செல்லும் திட்டம் இருந்ததா? உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் அவரிடம் கேட்கப்பட்டு விளக்கம் பெறப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று விசாரணையின் போது, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் அளித்த தகவல்களை வைத்தும் தம்பிதுரையிடம் விசாரணை நடைபெறுவதாக கூறப்படுகிறது.
இதைத் தொடர்ந்து அவரிடம் குறுக்கு விசாரணை நடத்த சசிகலா தரப்பு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. நாளை ஆறுமுகசாமி விசாரணை ஆணையத்தில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.