தலீவர் காலத்துல இருந்து எவ்ளோ பார்த்துட்டோம்.. இவுங்களையும் பார்த்துருவோம்!
சென்னை: சென்னை ராயப்பேட்டை அதிமுக தலைமை அலுவலகம் எத்தனை எத்தனையோ சரித்திரங்களை கொண்டது.. அப்படியான ஒரு 'சரித்திரம்' இன்றைய ஆலோசனைக் கூட்டத்தில் நடந்துவிட வாய்ப்பு இருந்ததால் தொண்டர்களும் கணிசமான எண்ணிக்கையில் கூடியிருந்தனர். ஆனால் 'சம்பவங்கள்' எதுவும் நடைபெறாமல் அமைதியாக கூடி கலைந்தனர் அதிமுக நிர்வாகிகள்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை என ராஜன் செல்லப்பா முன்வைத்த குரல் பெருநெருப்பாய் பற்றிக் கொண்டது. இதன் விளைவுதான் இன்றைய அதிமுக ஆலோசனை கூட்டம்.
அதிமுக மாவட்ட செயலாளர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் எம்.பிக்கள் ஆகியோரும் இன்றைய கூட்டத்தில் பங்கேற்றனர். வழக்கம் போல இன்றைய கூட்டத்துக்கான போஸ்டர்கள் அதகளப்படுத்தின என்று மட்டும் சொல்ல்விட முடியாது.
அதிமுகவில் இப்படி ஆளாளுக்கு பேசினா எப்படி? இதுக்குத்தான் ஒற்றை தலைமை தேவை!
அங்கிட்டு செங்கோட்டையன்
அதிமுகவில் ரணகளத்தையே ஏற்படுத்தும் வகையில் முதல்வர் எடப்பாடியை பொதுச்செயலாளரே வருக என ஒருபக்கம் போஸ்டர்... காரைக்குடியிலோ பொதுச்செயலாளர் செங்கோட்டையனே என ஒரு போஸ்டர்.. இந்த களபேரங்களால்தான் ‘ஆஹா ஆபீசில் ஏதோ நடக்கப் போகுது' என கடைகோடி தொண்டர்களும் அதிமுக தலைமை அலுவலகத்தில் குவிந்தனர்.
குவிந்த தொண்டர்கள்
அப்படி குவிந்த இரு சீனியர் தொண்டர்கள் படுசீரியசாக சென்னை மொழியில் அரசியல் பேசிக் கொண்டிருந்தனர். எம்ஜிஆர் காலம் தொடங்கி இன்றைய ஈபிஎஸ்- ஓபிஎஸ் வரையில் சுவாரசியமான சம்பவங்களை இருவரும் பகிர்ந்து கொண்டனர்.
தொண்டர்கள் விவாதம்
அதிமுகவின் முக்கியமான சம்பவங்களின் போது தங்களுக்கு கிடைத்த அனுபவங்கள், அடிதடி சம்பவங்கள் என அத்தனையையும் கொட்டிக் கொண்டனர். அதிமுகவின் இன்றைய ஆலோசனை கூட்டத்தில் என்ன பேசிக் கொள்வார்கள் என்பதையும் கூட யூகித்து கொண்டவர்களாக நீடித்தது அவர்களது பேச்சு.
உணர்ந்தால் எதிர்காலம்
இந்த தொண்டர்களின் பின்னால் ‘பொதுச்செயலாளர்' எடப்பாடியார் போஸ்டர்களில் ஜொலித்து கொண்டிருந்தார். லோக்சபா தேர்தலில் மரண அடி வாங்கியும் 18% வாக்குகளை அதிமுக பெற்றிருக்கிறது என்றால் இதுபோன்ற கடைகோடி தொண்டர்களால்தான் இந்த இயக்கம் உயிருடன் இருக்கிறது என்பதை உணரவேண்டியவர்கள் உணர்ந்தால் மட்டுமே எதிர்காலம் பிரகாசம்.