ரஜினிகாந்த் அல்ல.. பெரியாரை பற்றி யார் விமர்சித்தாலும் ஏற்க முடியாது.. அதிமுக அதிரடி
ரஜினிக்கு அதிமுக கண்டனத்தை தெரிவித்துள்ளது
Recommended Video
சென்னை: ஓபனாகவே ரஜினிக்கு எதிர்ப்பை தெரிவித்துவிட்டது அதிமுக.. "பெரியார் பற்றி ரஜினிகாந்த் மட்டுமல்ல, யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது" என்று தன் நிலைப்பாட்டை ஆணித்தரமாக எடுத்து வைத்து, ரஜினிக்கு ஒரு இலவச அட்வைஸையும் தந்துள்ளது!
இந்த வருஷம் ஆரம்பமே ரஜினியின் சர்ச்சையாகதான் ஆரம்பித்துள்ளது.. துக்ளக் விழாவில் பேசியது இன்றுவரை சர்ச்சையாகி வருகிறது.
ரஜினியின் பேச்சுக்கு வழக்கம்போல பாஜக தன்னுடைய ஆதரவை நேரடியாகவும், மறைமுகமாகவும், இன்ன பிற வழிகளிலும் தெரிவித்தபடியே உள்ளது.. அதேபோல, திமுகவும் பெரிய அளவில் இல்லாவிட்டாலும், தன்னுடைய எதிர்ப்பை ஓரளவு காட்டி உள்ளது.
Rajinikanth: ரஜினியின் "துக்ளக் தர்பார்".. கடைசியில் மு.க.ஸ்டாலின் போட்டார் பாருங்க ஒரே போடு!
திமுக தலைவர்
முரசொலியை நேரடியாக விமர்சித்தும், திகவினரை சீண்டி விட்டும் ஏன் திமுக களரீதியாக இறங்கி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்று ஒரு டவுட் இருந்து கொண்டே இருந்தது.. இதற்கு காரணம் என்னவென்று பார்த்தால், ரஜினி பேசியதை திமுக ஒரு பொருட்டாகவே மதிக்கவில்லை என்பதும், ரஜினி ஒரு நடிகர் மட்டும்தான் என்பதும் திமுக தலைவரின் பேட்டியை பார்த்தபிறகுதான் நமக்கு விளங்குகிறது.
பெரியார்
அதேபோல, அதிமுகவை பொறுத்தவரை நச்சென்று தன்னுடைய நிலைப்பாட்டை தெளிவுபடுத்தி உள்ளது.. "பெரியார் பற்றி ரஜினிகாந்த் மட்டுமல்ல, யார் பேசினாலும் அதை ஏற்க முடியாது" என்று ஓபனாகவே தெரிவித்துவிட்டது. "நான் பேசியதற்கு ஸாரி கேட்க மாட்டேன்.. நான் பேசியது சரிதான்" என்று ரஜினி இன்று வாதம் செய்ததும் அதிமுக தன்னுடைய கருத்தை வெளிப்படையாக சொல்லி உள்ளது.. அக்கட்சியின் செய்தி தொடர்பாளர் வைகைசெல்வன், இது தொடர்பான விளக்கத்தை ஒரு தொலைக்காட்சி பேட்டிக்கு தந்துள்ளார். அதில் அவர் சொல்லி உள்ளதாவது:
சூப்பர் ஸ்டார்
"பெரியார் பற்றி ரஜினி கருத்து பேசியிருப்பதை தவிர்த்து இருக்க வேண்டும். தந்தை பெரியார் சமூக நீதிக்காக வித்திட்ட தளபதியாக திகழ்ந்தவர்.. அவரை பற்றின உண்மையான கருத்துக்களை, நியாயமான கருத்துக்களை பதிவு செய்ய வேண்டும்.. குறிப்பாக சூப்பர் ஸ்டாராக இருக்கக்கூடிய ரஜினிகாந்த், அரசியலுக்கு வருவதாக சொல்லி கொள்ளும் ரஜினிகாந்த், இவற்றையெல்லாம் நன்கு யோசித்து, தனது அருகில் இருக்கக்கூடிய அரசியல் பார்வையாளர்களிடம் நன்கு விவாதித்து பேசியிருக்க வேண்டுமே தவிர இதுபோன்று பேசியிருக்ககூடாது.
தலைவர்கள்
தந்தை பெரியார் குறித்த கருத்து, ஏற்புடைய கருத்து இல்லை என்பதே அதிமுகவின் கருத்தும்.. அரை நூற்றாண்டு காலத்துக்கும் முன்பாக நடந்த இந்த செய்தியை அந்த காலக்கட்டத்தில் இருந்த தலைவர்களுடன் கலந்து பேசி, நடந்த சம்பவத்தை முன்வைத்து பேசியிருக்க வேண்டும். ஏன் என்றால், போகிற போக்கில் ஒன்றை பேசினால், அதை ஊடகங்களும், பத்திரிகைகளும் எடுத்து கொள்வதற்கு வாய்ப்பும் உள்ளது.
வைகை செல்வன்
ஒரு மிகப்பெரிய இடத்தில் இருப்பவர்கள் எப்போதுமே அது குறித்த கருத்தினை சொல்லும்போது, மிகுந்த தெளிவான பார்வையுடனும், தெளிவான சிந்தனையுடனும், ஆழ்ந்த தெளிவுடனும் பிழையில்லாமல் கருத்துக்களை முன்வைக்க வேண்டும். ரஜினி தொடர்ந்து இப்படி நிறைய முறை முன்னுக்கு பின் முரணாக கருத்துக்ளை முன் வைத்து வருகிறார்.. இனிமேல் அரசியல் நிகழ்வுகளை பற்றி பேசினால், அதற்குரிய ஆதாரங்களை, அடிப்படை சம்பவங்களை கையில் வைத்து கொண்டுதான் அவர் பேசுவது சரியாக இருக்கும்" என்று நச்சென்று கருத்தை தெரிவித்துள்ளார்.
சிறந்த அட்வைஸ்
பாஜகவின் பிம்பமாக பார்க்கப்பட்டு வரும் ரஜினியின் கருத்தை அதிமுக எதிர்க்கிறது என்பது தெளிவாகி உள்ளது.. மேலும் ரஜினிக்கு பல்லக்கு தூக்க போய் அது தங்கள் கட்சிக்கும் எந்த வகையிலாவது பாதிப்பை ஏற்படுத்தி விடும் என்பதையும் அதிமுக உணர்ந்துள்ளது போல தெரிகிறது. அரசியல் ரீதியாக இது எவ்வாறு இருப்பினும், வைகைச்செல்வனின் இந்த ஆழமான கருத்துக்களும், ஆணித்தரமாக அவர் எடுத்து வைக்கும் எதிர்ப்பும், ரஜினிக்கு தந்திருக்கும் அட்வைஸும், அவரது அரசியல் அனுபவத்துக்கு ஒரு சான்றாக தெரிகிறது!