குழப்பத்துக்கு காரணமே அதுதான்.. ஆனால் அஇஅதிமுக அறிக்கையில் அதற்கு முற்றுப் புள்ளி வைக்கலையே!
சென்னை: அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும், இணை ஒருங்கிணைப்பாளரும் வெளியிட்ட கூட்டறிக்கை கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பூட்டு போடுவதற்கே ஒழிய கடைசி வரை அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்ற குழப்பத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கவில்லை.
ஜெயலலிதா இறப்புக்குப்பின்னர் ஆட்சியையும் கட்சியையும் யார் வழிநடத்துவது என்ற கேள்வி எழுந்தது. இதையடுத்து கட்சியையும் ஆட்சியையும் சசிகலாவிடம் ஒப்படைக்க முற்பட்ட போது அவர் சிறை செல்ல நேரிட்டது.
அதற்கு பின்னர் நடந்த கதையெல்லாம் மக்களுக்கு நன்றாகவே தெரியும். அது போல் அதிமுக இரு அணிகளாக பிரிந்ததையும் பின்னர் சேர்ந்ததையும் யாராலும் மறக்க முடியாது. இந்த நிலையில் அதாவது அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழகத்தின் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த சர்ச்சை மீண்டும் எழுந்துள்ளது.
கட்சியானது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில்தான் என்பதில் யாருக்கும் எந்தவித குழப்பமும் இல்லை. ஆனால் ஆட்சி குறித்த கவலைதான் அதிமுக நிர்வாகிகளுக்கு ஏற்பட்டுள்ளது. அமைச்சர் செல்லூர் ராஜூ அடுத்த முதல்வர் யார் என்ற கேள்விக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் அவர் அளித்த பதில் கட்சியில் புயலை கிளப்பியது.
தேர்தலுக்கு பிறகு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து முதல்வரை தேர்வு செய்வர் என்றார். இவர் யாரை மனதில் வைத்து பேசுகிறார் என்ற கேள்வி எழுந்தது. இந்த நிலையில் அடுத்த நாளே அமைச்சர் ராஜேந்திர பாலாஜி எடப்பாடியாரே என்றும் நிரந்தர முதல்வர் என செல்லூர் ராஜூவின் கருத்துக்கு பதிலடி கொடுத்தார்.
இது தொடர்பாக அதிமுக தலைமை அலுவலகத்தில் கட்சி நிர்வாகிகள் கடந்த வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் இன்றைய தினம் தேனியில் அடுத்த முதல்வர் ஓபிஎஸ் என ஒட்டப்பட்ட போஸ்டரால் பரபரப்பு எழுந்தது. இதையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் இல்லத்தில் மூத்த அமைச்சர்கள் ஜெயக்குமார், தங்கமணி, சிவி சண்முகம் உள்ளிட்ட 12 பேர் ஆலோசனை நடத்தினர்.
அது போல் அவர்கள் அனைவரும் துணை முதல்வர் ஓபிஎஸ்ஸின் வீட்டிற்கும் சென்று ஆலோசனை நடத்தினர். இதையடுத்து தேனியில் ஒட்டப்பட்ட போஸ்டர்கள் கிழித்தெறியப்பட்டது. சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக ஆலோசனை செய்யப்பட்ட நிலையில் இருவரும் கூட்டாக அறிக்கை வெளியிட்டனர்.
அப்போது கட்சி நிர்வாகிகள் தலைமையின் அனுமதி இல்லாமல் எந்த கருத்தையும் தெரிவிக்கக் கூடாது என்றும் அப்படி மீறினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்றபடி முதல்வர் வேட்பாளர் யார் என்ற கேள்விக்கு பதிலே தரவில்லை. இந்த அறிக்கை மற்ற நிர்வாகிகளின் வாய்க்கு பூட்டு போடவே தவிர குழப்பங்களுக்கு தீர்வளிக்கவில்லை.
நம்மை வீழ்த்த நினைப்பவர்களுக்கு இடம் தரமால் ஒற்றுமையோடு செயல்படுவோம் - அஇஅதிமுக அறிக்கை