ஈரோடு கிழக்கு: நாங்களும் போட்டிதான்.. சவால்விடும் அதிமுக ஓபிஎஸ் அணி வேட்பாளரை தேடி வலைவீச்சு!
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்திருக்கும் ஓபிஎஸ் அணி, பலமான வேட்பாளரை வலைவீசி தேடிவருவதாக கூறப்படுகிறது.
ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுகிறார். இளங்கோவனுக்கு ஆதரவாக திமுக முழுவீச்சில் களமிறங்கிவிட்டது. திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள அத்தனை கட்சிகளும் இளங்கோவனை சலசலப்பின்றி ஆதரிக்கின்றன.
அதிமுக கூட்டணியில் அதிமுக இபிஎஸ் அணி போட்டியிடுவதாக ஏற்கனவே அறிவித்துவிட்டது. இதற்காக தமாகாவின் ஆதரவையும் பெற்றிருக்கிறது. பாஜக தலைவர்களிடமும் நேரில் இதனை அதிமுக இபிஎஸ் அணி தெரிவித்துவிட்டது. பாஜகவும் வேட்பாளரை நிறுத்தப் போவது இல்லை என்பதை மறைமுகமாக கூறிவிட்டது.
நாம் தமிழர் கட்சி, தேமுதிக ஆகியவை தனித்தே போட்டியிடுகின்றன. பாமக, யாருக்கும் ஆதரவு இல்லை என தெரிவித்துவிட்டது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம், காங்கிரஸை ஆதரிக்கவே வாய்ப்புகள் அதிகம்.
அதேநேரத்தில் அதிமுகவின் ஓபிஎஸ் அணியோ, நாங்களும்தான் தேர்தலில் போட்டியிடுவோம்; இல்லை எனில் பாஜக நிறுத்தினால் அந்த வேட்பாளரை ஆதரிப்போம் என்கிறது. அதிமுகவின் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளும் போட்டியிட்டால் இரட்டை இலை சின்னத்தை இரு அணிகளுமே உரிமை கோரும். ஆகையால் இரட்டை இலை சின்னம் முடங்கும் நிலை உள்ளது.
சென்னையில் நேற்று 3 மணிநேரம் தமது அணியினருடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தினர். அப்போதும் கூட நிச்சயம் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிடுவோம் என்றார். முன்னதாக குஜராத் மாநிலத்துக்கு ஓபிஎஸ் சென்றிருந்தார். குஜராத் பயணத்துக்குப் பின்னர் அழுத்தம் திருத்தமாக, சவால் விடும் வகையில் ஈரோடு கிழக்கில் போட்டி உறுதி என்கிறார் ஓபிஎஸ்.
திமுகவில் உருவாகும் 'ஷிண்டே’.. அது இவராகவும் இருக்கலாம்.. பொடி வைத்துப் பேசிய சி.வி.சண்முகம்!
ஆனாலும் இபிஎஸ் அணியோ அக்கட்சியின் கேவி ராமலிங்கம், தென்னரசு உள்ளிட்டோரில் யாரை வேட்பாளராக அறிவிக்கலாம் என தீவிரமாக பரிசீலித்து வருகிறது. ஓபிஎஸ் அணி, போட்டியிடுவோம் என கூறியிருக்கிறது அவ்வளவுதான். ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக ஓபிஎஸ் அணி சார்பாக போட்டியிடக் கூடிய வலிமையான அல்லது முகம் தெரிந்த பிரமுகர் யாருமே இல்லை. ஆகையால் திமுக, அதிமுக இபிஎஸ் கட்சிகளை சமாளிக்க கூடிய வலிமையான, பணத்தில் பலமான ஒரு வேட்பாளரை வலை வீசி தேடுகிறதாம் ஓபிஎஸ் அணி.