அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு... பிப்., 14 ம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு
சென்னை: நாடாளுமன்ற தேர்தலையொட்டி அதிமுகவில் விருப்ப மனு பெற வருகிற 14 ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளிப்பது இன்று மாலையுடன் நிறைவடைந்த நிலையில், அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
நாடாளுமன்ற தேர்தலில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புகிறவர்கள் சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் 4 ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையில் 25 ஆயிரம் பணம் செலுத்தி விண்ணப்பங்கள் பெறலாம் என்று கடந்த வாரம் தெரிவிக்கப்பட்டது
துணை முதல்வர் ஓ. பன்னீர் செல்வத்தின் மகன் ரவீந்திரநாத், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட பலரும் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். இதுவரை சுமார் ஆயிரத்து 200 பேர் அதிமுக சார்பில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர்.
அதே சமயம், விருப்ப மனு தாக்கல் செய்ய இன்று இறுதி நாள் என்பதால் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏராளமானோர் குவிந்தனர். இந்தநிலையில், அக்கட்சியின சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அதில், விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்துத் தருமாறு கழக நிர்வாகிகளும், கழக உடன்பிறப்புகளும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளினை ஏற்று கழகத்தினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற 14 ( வியாழக் கிழமை ) மாலை 5 மணி வரை வழங்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கூட்டணி பேச்சுவார்த்தையில் அதிமுக தீவிரமாக இறங்கி உள்ளது.