சாதிய உணர்வை தூண்டி கட்சியை அபகரிக்க வஞ்சக வலை விரிக்கும் சசிகலா - அதிமுகவில் அதிரடி தீர்மானம்
ஆடியோ அரசியல் செய்யும் சசிகலாவிற்கு எதிராக அதிமுகவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. சேலம், விழுப்புரம் மாவட்டங்களில் நடைபெற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சென்னை: சாதிய உணர்வை தூண்டி அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்தும் வகையில் செயல்படுவதாக சேலம் மாவட்டம் ஓமலூரில் இபிஎஸ் பங்கேற்ற நிர்வாகிகள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதிமுகவின் அடிப்படை உறுப்பினராவதற்கு தகுதி இல்லாதவர் சசிகலா என விழுப்புரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இதே போல சசிகலா உடன் பேசுபவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் என மதுரையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
அரசியலை விட்டு ஒதுங்கப்போவதாக கூறிய சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் தினம் தினம் பேசி அந்த ஆடியோவை ரிலீஸ் செய்து வருகிறார். சசிகலா அதிமுக நிர்வாகிகளுடன் பேசி வருவதால் அதிமுகவில் குழப்பமும் ஏற்படும் நிலை உள்ளதாக அதிமுகவினர் கூறிவருகின்றனர்.
40க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் ரிலீஸ் ஆன நிலையில் இதற்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய ஓபிஎஸ் ஈபிஎஸ், அண்மையில் நடைபெற்ற எம்எல்ஏக்கள் கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சசிகலாவுடன் பேசும் உறுப்பினர்கள் கட்சியில் இருந்து நீக்கப்படுவார்கள் என அறிவித்ததோடு, 15 பேரை அதிரடியாக நீக்கி உத்தரவிட்டனர்.
நானே வருவேன்.. புது ஆடியோ ரிலீஸ் செய்த சசிகலா - சுற்றுப்பயணத்தால் அதிமுகவில் சலசலப்பு வருமா
சசிகலா தொடர் பேச்சு
அதைப்பற்றி கவலைப்படாத சசிகலா, தொடர்ந்து ஆடியோ வெளியிட்டு வருகிறார். கட்சியை கைப்பற்றுவேன் என்று கூறும் வகையில் பேசி வரும் சசிகலா விரைவில் மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்யப்போவதாக கூறியுள்ளார். விரைவில் அதிமுகவையும் நிர்வாகிகளையும் வழிநடத்தப்போவதாகவும் கூறியுள்ளார் சசிகலா.
எடப்பாடி பழனிச்சாமி
சசிகலாவின் இந்த ஆடியோ கடும் எதிர்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்ட அளவில் சசிகலாவிற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டு வருகிறது. சேலம் மாவட்டத்தில் ஓமலூரில் அதிமுக புறநகர் மாவட்ட அலுவலகத்தில் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் பங்கேற்ற அதிமுக நிர்வாகிகள் கூட்டத்திலும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
வஞ்சக வலை விரிக்கும் சசிகலா
சசிகலா சாதிய உணர்வுகளை தூண்டும் விதமாக பேசி அதிமுகவினர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார். அதிமுகவை அபகரிக்க தினம் தனம் ஆடியோவில் பேசி வஞ்சக வலையை சசிகலா விரிப்பதாகவும் அந்த தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தகுதி இல்லாத சசிகலா
இந்நிலையில் இன்று விழுப்புரம் மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் தலைமையில் விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டம் நடைபெற்றது. அப்போது, கட்சி உறுப்பினராக இல்லாதவரும் ஊழல் வழக்கில் தண்டனை பெற்றவருமாகிய சசிகலா அதிமுகவின் அடிப்படை உறுப்பினர் ஆவதற்கு கூட தகுதி இல்லாதவர்,அதிமுக பற்றி பேசுவதற்கு தகுதி இல்லை என கண்டனம் தெரிவித்து விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக கூட்டத்தில் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஆர்பி உதயகுமார் தீர்மானம்
இதே போல சசிகலாவிற்கு எதிராக மதுரையில் ஆர்.பி உதயகுமார் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளன. சசிகலா உடன் போனில் பேசுபவர்களை கட்சியை விட்டு நீக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த தீர்மானங்கள் சசிகலாவை எந்த அளவிற்கு கட்டுப்படுத்தும் என்பது போகப்போகத் தெரியும்.