மெரினாவை அதிர வைத்த நாதஸ்வர முழக்கம்.. ஜெ.சமாதியில் நடைபெற்ற அதிமுக பிரமுகர் இல்ல திருமணம்!
ஜெயலலிதா சமாதியில் பிரமுகர் இல்ல திருமணம் நடைபெற்றது
சென்னை: எங்கேயாவது சமாதியில் நாதஸ்வரம் சத்தம் கேட்டிருக்கா?!! ஆனால் நம்ம மெரினா பீச்சில் கேட்டது.. தன் மகனுக்கு ஜெயலலிதா சமாதியில்தான் கல்யாணம் செய்ய வேண்டும் என்று விருப்பப்பட்டு அதன்படியே நடத்தியும் காட்டியுள்ளார் அதிமுக விசுவாசி ஒருவர்!
வாழ்க்கையில் ஒருமுறை நடப்பது கல்யாணம் என்பதால்தான் ஆயிரத்தெட்டு சாங்கியம், சாஸ்திரங்கள், நடைமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது.
அப்படியே தாங்கள் அரசியல் கட்சியை சேர்ந்தவர்கள் என்றாலும், நிச்சயிக்கப்பட்ட உரிய கால, இடங்களில்தான் அத்தகைய தலைவர்களையோ, பிரமுகர்களையோ வரவழைப்பது வழக்கம். ஆனால், ஜெயலலிதா என்ற மாபெரும் தலைவி என்று வந்துவிட்டால், இடம், நேரம், காலம் எதுவுமே தேவையில்லை என்று மார்தட்டி சொல்கிறார்கள் அவரது தீவிர விசுவாசிகள்.
சமாதி
அப்படி ஒருவர்தான், பவானி சங்கர். திமுக வடசென்னை வடக்கு மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளராக இருப்பவர். மறைந்த ஜெயலலிதா மீது அப்படி ஒரு விசுவாசம், பக்தி நிறைந்தவர்.. மகன் சாம்பசிவராமன் என்கிற சதீஷ்-க்கு அம்மா சமாதியில்தான் கல்யாணத்தை நடத்த வேண்டும் என்று முடிவு செய்தார்.
நடிகர் செந்திலுக்கு அமமுகவில் டிடிவி தினகரன் கொடுத்த சூப்பர் பதவி.. அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு
அனுமதி
இதற்காக நிறைய வேலைகளை பார்த்தார் பவானிசங்கர். நேற்றுதான் கல்யாணம்.. இதற்காக நினைவிடத்தில் கல்யாணம் நடத்த சிறப்பு அனுமதி வாங்கினார். ஏனென்றால், இங்கு நினைவிடத்திற்கான கட்டிட பணிகள் நடந்து வருகிறது. அதனால் கொஞ்ச நாளாக பொதுமக்களை கூட அனுமதிக்காமல் உள்ளனர். இந்த சூழலில் அரசின் சார்பில் அனுமதியை முறையாக வாங்கினார் பவானி.
அலங்காரம்
நினைவிடம் வாசம் வீசும் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது. ஜெயலலிதா படத்துக்கு பிரமாண்டமான மாலை போடப்பட்டது. உறவினர்கள் புடைசூழ, அதிமுக மூத்த தலைவர் தமிழ்மகன் ஹுசைன், முன்னாள் அமைச்சர் கோகுல இந்திரா என அதிமுக முக்கிய புள்ளிகள் மெரினாவில் குவிய தொடங்கினர். ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன்தான் தாலி எடுத்து கொடுத்தார்.
பூவாசம்
சமாதியில் நாதஸ்வர மேளதாள முழக்கத்துடன் மணமகன் சதீஷ் மணப்பெண் தீபிகாவின் கழுத்தில் தாலி கட்டினார். உடனடியாக சமாதியிலேயே இருவரும் விழுந்து ஆசி வாங்கினார்கள். மணமக்களுக்கு அதிமுக தலைவர்கள் உட்பட தொண்டர்கள் கரகோஷம் எழுப்பி வாழ்த்து சொன்னார்கள். எப்படியோ.. சமாதியில் இருந்து பூக்கள் நறுமணத்துடன் நாதஸ்வர முழக்கம் மெரினா முழுக்க கேட்டது வித்தியாசமாக இருந்தது!