இது முழுக்க முழுக்க எங்களுக்குத்தான் சாதகம்.. அதிமுக + பாமக கூட்டணியை விமர்சித்த திருமாவளவன்
தமிழகத்தில் பாஜக மற்றும் பாமகவுடன் அதிமுக உருவாக்கி இருக்கும் கூட்டணி திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
சென்னை: தமிழகத்தில் பாஜக மற்றும் பாமகவுடன் அதிமுக உருவாக்கி இருக்கும் கூட்டணி திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
லோக்சபா தேர்தலுக்கான அதிமுக கூட்டணி இறுதி வடிவத்தை பெற்று இருக்கிறது. அதிமுக பாமக கூட்டணி இன்று காலைதான் உறுதியானது. அதிமுக கூட்டணியில் பாமக 7 தொகுதிகளில் போட்டியிடுகிறது.
அதேபோல் இதில் பாஜக, மற்றும் தேமுதிக எத்தனை இடங்கள் போட்டியிடும் என்று விரைவில் அறிவிக்கப்பட உள்ளது. தற்போது இந்த கூட்டணி குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கருத்து தெரிவித்துள்ளார்.
தொல்.திருமாவளவன் தனது பேட்டியில், தமிழகத்தில் பாஜக மற்றும் பாமகவுடன் அதிமுக உருவாக்கி இருக்கும் கூட்டணி திமுகவிற்கு சாதகமான சூழ்நிலையை உருவாக்கியுள்ளது. ஏற்கனவே அதிமுக-பாமக கூட்டணி தோல்வியை சந்தித்தது.
இந்த கட்சிகள் எல்லாம் இதற்கு முன் சேர்ந்த எந்த தேர்தலிலும் வெற்றிபெற்றதாக வரலாறு கிடையாது. அது இப்போதும் தொடரும்.
அதிமுகவின் மெகா கூட்டணி வெற்றிக்கான மாயையாகவே கருதப்படுகிறது. ஆளுமைதிறன் கொண்ட ஜெயலலிதா இருந்த போதே பாமக தோல்வியை கண்டது.
தற்போதைய மத்திய மாநில அரசுகளுக்கு எதிரான மனநிலையே தமிழக மக்கள் மத்தியில் இருக்கிறது. ஆந்திராவில் நாடாளுமன்ற தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சி போட்டியிடும். தமிழகத்திலும் திமுக கூட்டணியில் போட்டியிடும்.
பாமக எந்த அணியில் சேர்ந்தாலும் அவர்களுக்கு வெற்றி என்பது மாயை, ஒரு பிரமை. பாமக கொள்கையில்லாத பேரம் பேசும் கட்சி என்பதால்தான் ஜெயலலிதா விலக்கியே வைத்தார். திராவிடக் கட்சிகளுடன் 110 சதவீதம் கூட்டணியில்லை என கூறியவர் ராமதாஸ்.
ஜெயலலிதாவின் முடிவுகளுக்கு எதிராகத்தான் அதிமுக தற்போது செயல்படுகிறது. பாமகவுடன் கூட்டணி வைத்து ஜெயலலிதாவின் நிலைப்பாட்டிற்கு எதிராக செயல்பட்டுள்ளனர் என்று திருமாவளவன் விமர்சனம் வைத்துள்ளார்.