விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு...திமுகவிற்கு எதிராக தமிழகம் முழுவதும் அதிமுக போராட்டம்
தேர்தல் அறிக்கையில் சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி திமுக அரசுக்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சென்னை: சட்டசபைத் தேர்தலின் போது விடியல் தருவதாக சொன்னது என்னாச்சு என்று அதிமுகவினர் கேள்வி எழுப்பியுள்ளனர். வாக்குறுதிகளை நிறைவேற்றாத திமுக அரசைக் கண்டித்து தமிழகம் முழுவதும் அதிமுகவினர் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி பெட்ரோல் டீசல் விலை உயர்வு குறைப்பு, குடும்ப தலைவிகளுக்கு அறிவித்த 1000 தரப்படவில்லை. நகைக்கடன் திரும்ப பெற நடவடிக்கை இல்லை, மேகதாது அணை விவகாரம் தீர்க்கப்படவில்லை, நீட் தேர்வு பிரச்சனை தீர்க்கப்படவில்லை உட்பட பல பிரச்சனைகளை முன்னிறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
அதேபோல் சேலம் சூரமங்கலத்தில் அதிமுக துணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிச்சாமி பதாகைகளை ஏந்தி போராட்டம் நடத்தினார். கோபிசெட்டிபாளையத்தில் ஏ.கே.செங்கோட்டையன், திண்டிவனத்தில் சிவி சண்முகம் போராட்டம் செய்கின்றனர்.
கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ, சென்னை கேகே நகரில் வளர்மதி உள்ளிட்டோரும் பங்கேற்றனர். நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நகர ஒன்றியஅ.தி.மு.க. சார்பில் தி.மு.க. அரசு அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாததை கண்டித்து
அம்பை நகர செயலாளர் அறிவழகன் தலைமையில் நகர கழக சார்பில் ஊர்க்காட்டில் திமுகவிற்கு பதாகை ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட பிரதிநிதி சுடலை, முன்னாள் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வழக்கறிஞர் சுரேஷ், ஒன்றிய இளைஞரணி பாசறை செயலாளர் வடிவேல்,நகர எம்ஜிஆர் மன்ற செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர அம்மா பேரவை செயலாளர் பாலசுப்பிரமணியன், நகர கழக பொருளாளர் மாரியப்பன்,19வது வார்டு செயலாளர் தியாகராஜன்,நகர மாணவரணி செயலாளர் நெல்டன், நகர இளைஞர் மற்றும் இளம்பெண்கள் பாசறை செயலாளர் எஸ் ஆர் எஸ் அருண் ,3வது வட்ட கழக செயலாளர் இசக்கி மூப்பனார், மகளிரணி அலமேலு மற்றும் நகர கழக நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டு திமுக அரசை கண்டித்து முழக்கமிட்டனர்.