அதிமுக ராஜ்யசபா வேட்பாளர்கள் யார் யார்? நாளை முடிவு .. ஒபிஎஸ்-ஈபிஎஸ் இப்படி முடிவெடுக்க வாய்ப்பு
சென்னை: அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினர் மத்தியில் எழுந்துள்ள நிலையில், வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான அதிமுக கூட்டம் நாளை காலை 10மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடக்கிறது.
தமிழகத்தில் காலியாகும் 6 ராஜ்ய சபா எம்பிக்கள் இடங்களுக்கு வரும் 18 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது எம்.எல்.ஏ.க்கள் எண்ணிக்கையின் அடிப்படையில் நடைபெறும் இந்த தேர்தலில் திமுக மற்றும் அதிமுகவிற்கு தலா 3 மாநிலங்களவை உறுப்பினர் பதவி கிடைக்கப்போகிறது.
இதில். திமுக ஏற்கனவே வேட்பாளர்களை அறிவித்துவிட்டது. தொமுச பொதுச்செயலாளர் சண்முகம், வழக்கறிஞர் பிரிவைச் சேர்ந்த வில்சன் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ஆகியோர் திமுக சார்பில் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், அதிமுக சார்பில் ராஜ்யசபா தேர்தலில் போட்டியிடப்போவது யார் என்பது குறித்து அக்கட்சியினரிடையே மிகுந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. இந்நிலையில் வேட்பாளர்களை இறுதி செய்வதற்கான அதிமுக கூட்டம் நாளை காலை 10மணிக்கு ஓபிஎஸ்-ஈபிஎஸ் தலைமையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் ஒப்பந்தப்படி ஓரிடத்தை பாமகவுக்கு வழங்கிவிட்டு எஞ்சிய இரண்டு இடங்களில் அதிமுக போட்டியிட போகிறது. இந்நிலையில் தமிழ்மகன் உசேன், அன்வர் ராஜா, வைகைச்செல்வன், பொன்னையன், மனோஜ் பாண்டியன், முன்னாள் சபாநாயகர் தம்பிதுரை, கே.பி.முனுசாமி, நத்தம் விஸ்வநாதன், கோகுல இந்திரா, வேணுகோபால், மைத்ரேயன் உள்பட பலரும் அந்த இரண்டு இடங்களுக்கு போட்டியில் உள்ளனர். இவர்களில் இரண்டு பேருக்கு தான் ஒபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் வாய்ப்பு தருவார்கள் என கூறப்படுகிறது.
முன்னதாக லோக்சபா முன்னாள் துணை சபாநாயகர் தம்பிதுரை, முன்னாள் எம்பிக்கள் வேணுகோபால், அன்வர் ராஜா ஆகியோர் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து சீட் கேட்டு நெருக்கி வருவதாக கூறப்படுகிறது.. மற்றொரு புறம் அதிமுக ஒருங்கிணைப்பாளரும் துணை முதல்வருமான ஒ. பன்னீர்செல்வத்தை, முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி, முன்னாள் எம்பிக்கள் மனோஜ் பாண்டியன், மைத்ரேயன் ஆகியோர் சந்தித்து சீட்டு கேட்டு நெருக்கி வருவதாக கூறப்படுகிறது. எனவே இருவரும் தலா ஒருவரை பரிந்துரை செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.