பரோலில் சசிகலா 'பராக்' பராக்'... காத்திருக்கும் அதிருப்தியாளர்கள்...மீண்டும் 'கூவத்தூர்' கூத்து.?
சென்னை: பெங்களூரு சிறையில் இருந்து சசிகலா பரோலில் வெளியேவர உள்ளார். லோக்சபா தேர்தல் முடிவுகளை முன்வைத்து சசிகலா மூலமாக அதிமுகவில் மீண்டும் சலசலப்புகள் அல்லது தர்ம யுத்தங்கள் நடைபெறலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
சசிகலா சிறைக்குப் போனாலும் தமக்கு துரோகம் செய்த ஓ.பன்னீர்செல்வம் மீதான கோபம் குறையவில்லை. முதல்வர் தரப்பில் இருந்து அவ்வப்போது சசிகலா தரப்புடன் சமாதானப் பேச்சுகள் நடைபெறுவதாகவும் கூறப்படுகிறது.
சசிகலாவுடன் மோதல் போக்கு வேண்டாம் என்பதாலேயே இன்னமும் மிடாஸ் கம்பெனியிடம் இருந்த தமிழக அரசு மதுபானங்களை கொள்முதல் செய்து வருகிறது. தங்களுக்கு தினகரன் மீது மட்டும்தான் கோபம்.. சின்னம்மா மீது எந்த கோபம் இல்லை என வெளிப்படுத்துவதற்குதான் மிடாஸ் கொள்முதல் தொடருகிறதாம்.
வாக்குப்பதிவு எந்திரங்கள் மாற்றப்படலாம் என அச்சம்... 24 மணிநேரமும் கண்காணிக்கும் எதிர்க்கட்சிகள்!
பரோலில் வரும் சசிகலா
இந்நிலையில் சசிகலா பரோலில் வர உள்ளார். அப்படி சசிகலா பரோலில் வரும் போது அவரை சந்தித்து புலம்புவதற்கு அதிமுகவில் அமைச்சர்கள் முதல் நிர்வாகிகள் வரை தயாராக உள்ளனர்.
மீண்டும் கூவத்தூர்?
அனைவருமே நாளைய லோக்சபா தேர்தல் முடிவுகளுக்காகவே காத்திருக்கின்றனர். தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்துவிட்டால் முதல்வர் எடப்பாடி மீது அதிருப்தியில் இருப்பவர்கள் சசிகலாவை சந்தித்து உள்ளடி வேலைகளுக்கு தூபம் போடுவது உறுதியாகிவிடும். அதாவது இன்னொரு கூவத்தூர் கூத்துகள் நடைபெறுவதை தவிர்க்க முடியாதாம்.
சாட்டையை சுழற்றும் முதல்வர்
லோக்சபா தேர்தலில் 10 தொகுதிகளுக்கு மேல் அதிமுக வென்றுவிட்டால் தாம் ஒரு வலிமையான தலைவரும் கூட என்பதை முதல்வர் எடப்பாடி நிரூபித்துவிடுவார். கட்சியில் அதிருப்தியாளர்கள் பலருக்கு எதிராகவும் சாட்டையை சுதந்திரமாக சுழற்றுவார்.. என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள்.
தீர்மானிக்கும் முடிவுகள்
சசிகலாவைப் பொறுத்தவரையில் அதிமுக பொதுச்செயலர், முதல்வர் நாற்காலி இரண்டும்தான் தேவை. இந்த இரண்டையும் பெறுவதற்கான அத்தனை வியூகங்களையும் வகுத்து ஒவ்வொன்றாக செயல்படுத்தி வருகிறார் சசிகலா. நாளைய தேர்தல் முடிவுகள்தான் சசிகலா வருகையின் போது நடக்கப்போகும் அத்தனை அக்கப்போர்களையுமே தீர்மானிக்கப் போகிறது.