அதிமுக மாவட்டங்கள் அதிரடியாக பிரிப்பு- திண்டுக்கல் கிழக்கு மா.செ.வானார் நத்தம் விஸ்வநாதன்
சென்னை: அதிமுகவில் மாவட்டங்கள் அதிரடியாக பிரிக்கப்பட்டு 29 புதிய மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். திண்டுக்கல் மாவட்டம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதனால் அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் படுதீவிரம் காட்டி வருகின்றன.
அதிமுகவில் மாவட்டங்களைப் பிரிக்கும் பணிகள் படுதீவிரமாக நடைபெற்றது. மாவட்டங்களைப் பிரித்தால் ஒன்றியம் உட்பட ஒட்டுமொத்த அடிப்படை கட்டமைப்பும் மாற்றப்படும் என்பதால் பெரும் எதிர்பார்ப்பு நிலவியது.
மாவட்ட பிரிப்பில்தான் அரசியல் எதிர்காலமே இருக்கு.. கடுமையாக போராடும் நத்தம் விஸ்வநாதன்
29 மா.செ.க்கள் நியமனம்
இந்த நிலையில் துணை முதல்வரும் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளருமான ஓபிஎஸ், முதல்வரும் இணை ஒருங்கிணைப்பாளருமான ஈபிஎஸ் ஆகியோர் இன்று மாவட்டங்களைப் பிரித்து புதிய மாவட்ட செயலாளர்களை அறிவித்துள்ளனர். மொத்தம் 29 புதிய மாவட்ட செயலாளர்களை நியமித்து இருவரும் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
திண்டுக்கல் கிழக்கு மா.செ. நத்தம் விஸ்வநாதன்
திண்டுக்கல் மாவட்டமானது கிழக்கு, மேற்கு மாவட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. நத்தம், நிலக்கோட்டை, ஆத்தூர், பழனி ஆகிய சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கி திண்டுக்கல் கிழக்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. திண்டுக்கல் கிழக்கு மாவட்டத்தின் செயலாளராக நத்தம் விஸ்வநாதன் நியமிக்கப்பட்டுள்ளார். அதிமுக மாவட்ட பிரிப்புக்கான தலைமை கழக குழுவில் நத்தம் விஸ்வநாதனும் இடம்பெற்றிருந்தார்.
திண்டுக்கல் மேற்கு மா.செ. சீனிவாசன்
இதனால் இந்த வாய்ப்பை பயன்படுத்தி திண்டுக்கல் மாவட்ட இழந்த செல்வாக்கை எப்படியும் நத்தம் விஸ்வநாதன் பெறவே முயற்சிப்பார் என்பதை நாம் நமது ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் ஏற்கனவே பதிவு செய்திருந்தோம். அதுபோலவே நத்தம் விஸ்வநாதன் சாதித்தும் இருக்கிறார். திண்டுக்கல் மாவட்டத்தில் எஞ்சியிருக்கும் திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம் தொகுதிகளை உள்ளடக்கி திண்டுக்கல் மேற்கு மாவட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதன் செயலாளராக வனத்துறை அமைச்சர் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஒன்றியங்களும் 2 ஆக பிரிப்பு
தற்போது திண்டுக்கல் மாவட்டம் 2 மாவட்டங்களாக்கப்பட்டுள்ள நிலையில் ஒன்றியங்களும் மேலும் பிரிக்கப்படும். உதாரணமாக திண்டுக்கல் மேற்கு மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் தொகுதியில் வேடசந்தூர், வடமதுரை, குஜிலியம்பாறை ஒன்றியங்கள் உள்ளன. தற்போது வேடசந்தூர் ஒன்றியம் 2 ஆக பிரிக்கப்படலாம்; மேலும் ஒரு புதிய ஒன்றியமும் உருவாக்கப்படலாம் என்கின்றன அதிமுக வட்டாரங்கள்.