அதிமுகவின் அஞ்சா நெஞ்சன்... மனித பிரமீடு அமைத்து எம்ஜிஆரின் கவனம் ஈர்த்த மதுசூதனன்
அண்ணா சாலையில் மாலை அணிவிக்க எம்ஜிஆர் சென்ற போது மனித பிரமீடு அமைத்து எம்ஜிஆரை பிரமிக்க வைத்தவர் மதுசூதனன்.
சென்னை: அதிமுகவில் அஞ்சா நெஞ்சன் என்ற அடைமொழியோடு அழைக்கப்பட்டவர் மதுசூதனன். அவரது அதிரடி செயல்களால் மறைந்த முதல்வர் எம்ஜிஆரின் கவனம் ஈர்த்தவர். அண்ணாசிலைக்கு மாலை அணிவிக்க சென்ற போது ஏணி இல்லாமல் போகவே தொண்டர்களை நிறுத்தி மனித பிரமீடு அமைத்து எம்ஜிஆரை ஏற்றி விட்டு பிரமிக்க வைத்தவர். அதிமுக தொடங்கிய காலத்தில் தொண்டராக இணைந்து தனது கடைசி காலம் வரைக்கு அதிமுகவின் விசுவாசியாக அவைத்தலைவராக மறைந்துள்ளார் மதுசூதனன்.
Recommended Video
அதிமுகவின் அவைத் தலைவரும், அக்கட்சியின் மூத்த தலைவருமான மதுசூதனன் உடல் நலக்குறைவினால் இன்று காலமானார். 80 வயதான மதுசூதனன் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட ஆர்.கே. நகர் சட்டசபைத் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் போட்டியிட்டவர்.
அதிமுக அவைத்தலைவர் மதுசூதனன் காலமானார் - 3 நாட்கள் துக்கம் அனுசரிப்பு... தலைவர்கள் இரங்கல்
வயதானாலும் கட்சிப்பணிகளில் தீவிரமாக ஈடுபட்டவர் கொரோனாவில் இருந்து மீண்ட நிலையிலும் திடீரென உடல்நிலை மோசமானது வென்டிலேட்டர் உதவியுடனும் சிகிச்சை பெற்று வந்த அவர், பிற்பகலில் சிகிச்சை பலனின்றி காலமானார்.
ரசிகராக தொடங்கிய பயணம்
வடசென்னையின் ஒவ்வொரு பகுதியும் மதுசூதனன் பற்றி அறிந்திருக்கும். அரை நூற்றாண்டு காலமாக வட சென்னையின் முக்கிய முகமாக இருந்தவர். எம்ஜிஆர் சினிமாவில் நடிக்கத் தொடங்கி பிரபலமான காலத்திலேயே சென்னையில் ரசிகர் மன்றம் தொடங்கி அதற்கு தலைவராக செயல்பட்டு வந்தார் மதுசூதனன்.
மனித பிரமீது அமைத்தவர்
1972 ஆம் ஆண்டு எம்.ஜி.ஆர் அதிமுகவை தொடங்கியபோது நூற்றுக்கணக்கான தொண்டர்களுடன் ராமாவரம் தோட்டத்திற்கும் சத்யா ஸ்டுடியோவிற்கு தினம் தோறும் சென்று சந்தித்தார் மதுசூதனன்.
திமுகவில் இருந்து விலகிய எம்ஜிஆர் கட்சி தொடங்கியதாக அறிவித்த நேரத்தில் சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவிப்பதற்காக சென்ற போது அங்கு பொதுப்பணித் துறை அதிகாரிகளால் வைக்கப்பட்டிருந்த ஏணி அகற்றப்பட்டிருந்து. சற்றும் யோசிக்காத மதுசூதனன் தனது ஆதரவாளர்களை வைத்து மனித பிரமிடை ஏற்படுத்தி அதில் ஏறி எம்.ஜி.ஆரை ஏற்றினார். பிரமிப்பு அகலாத எம்ஜிஆர் அண்ணா சிலைக்கு மாலை அணிவித்தார்.
எம்ஜிஆர் கொடுத்த பதவி
தனது அதிரடியான செயல்களால் எம்ஜிஆரின் கவனத்தை ஈர்த்த மதுசூதனன் அதிமுகவில் பல முக்கிய பொறுப்புகளில் வகித்துள்ளார், 1980ஆம் ஆண்டு அதிமுகவின் உட்கட்சி தேர்தல் நடைபெற்றது அப்போது அதிமுகவிற்கு அமைப்பு ரீதியாக சென்னை ஒரு மாவட்டமாக இருந்தது, சென்னை மாவட்ட செயலாளர் பதவிக்கு மதுசூதனனும் மற்றும் ஜேப்பியார் கல்வி நிறுவனத்தின் நிறுவனர் மறைந்த ஜேபிஆரும் போட்டியிட்டனர். அதில் மதுசூதனன் தோல்வி அடைந்தாலும் எம்ஜிஆர் உடனடியாக அவருக்கு அனைத்துலக எம்ஜிஆர் மன்றத்தில் சென்னை மாவட்ட செயலாளர் பொறுப்பை வழங்கினார்.
வட சென்னையின் முகம்
தொண்டர்களின் நம்பிக்கை பெற்றவராக இருந்துள்ளார் மதுசூதனன். அதிமுக தொண்டர்களுக்கு சென்னையில் எங்கே பிரச்சினை என்றாலும் உடனடியாக தலையிட்டு தொண்டர்களின் பக்கம் நிற்பார். இவருக்கு அஞ்சாநெஞ்சன் என்ற அடைமொழி வைத்து அழைத்து வந்தனர்.
வடசென்னை மாவட்ட செயலாளர்
1982 ஆம் ஆண்டு தமிழ்நாட்டின் மேல்சபை உறுப்பினராகவும் பதவி வகித்த மதுசூதனன் கட்சியில் படிப்படியாக உயர்ந்தார். வடசென்னை மாவட்ட செயலாளர், கட்சியின் அமைப்புச் செயலாளர், அவைத்தலைவர் என உயர்ந்தார். எம்ஜிஆரின் மறைவுக்குப் பிறகு அதிமுக ஜானகி- ஜெயலலிதா என இரு அணிகளாக பிரிந்தது. ஜெயலலிதாவின் பக்கம் நின்றார் மதுசூதனன்.
அவைத்தலைவர்
1991 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில் டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டப்பேரவைத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்று முதல் முறையாக அமைச்சராகவும் ஆனார், மது சூதனனுக்கு கைத்தறி துறை இலாகா வழங்கப்பட்டது, சுமார் 15 ஆண்டுகளுக்கு மேலாக அதிமுகவின் அவைத் தலைவர் பொறுப்பில் இருந்து வந்தார் மதுசூதனன் இன்று காலமாகி விட்டார்.
கண்ணீர் அஞ்சலி
ஏழை - எளியவர்கள் மற்றும் அடித்தட்டு மக்களின் குரலாக அதிமுகவிற்குள் இறுதி மூச்சு வரை திகழ்ந்த மதுசூதனன் இன்றைக்கு மறைந்துள்ளது அதிமுகவினரை மட்டுமல்லாது அரசியல் கட்சியினர் பலரையும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. அஞ்சா நெஞ்சனை இழந்து விட்டோம் என்று அதிமுகவினர் மட்டுமல்லாது எதிர்கட்சியினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.