மே 23ல் கவனமாக இருங்க.. அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு ஒபிஎஸ்-ஈபிஎஸ் முக்கிய அறிவிப்பு
சென்னை: திமுகவை பற்றி நாட்டுக்கே தெரியும் என்றும் வாக்கு எண்ணிக்கையின் போது கவனமாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டு அதிமுக தலைமை இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மக்களை பொதுத் தேர்தல் மற்றும் 22 சட்டமன்ற தொகுதிகளுககான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு முடிந்த நிலையில வரும் 23ம்தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது.
இதையொட்டி அதிமுக தலைமை தனது வாக்கு எண்ணிக்கை முகவர்களுக்கு கவனத்தில் இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் என சிலவிஷயங்களை குறிப்பிட்டுள்ளது. அவற்றை இப்போது பார்க்கலாம்.
பரபரக்கும் புதிய எக்சிட் போல்.. அதிமுகவின் எஃகு கோட்டையான கரூரில் வெற்றி வாய்ப்பு யாருக்கு?
வாக்கு இயந்திரம்
வாக்கு எண்ணிக்கை நடைபெறும் நாளான 23.5.2019 அன்று அதிமுக வாக்கு எண்ணிக்கை முகவர்கள் காலை 6 மணிக்கே சென்றுவிட வேண்டும். அங்கு வாக்கு எண்ணிக்கைக்கு முறைப்பாடு அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதா என்பதை உறுதி படுத்திக் கொள்ளுங்கள். வாக்கு பதிவு இயந்திரங்களில் வைக்கப்பட்டுள்ள சீல் முறையாக உள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும்.
வாக்குகள் விவரம்
பதிவான வாக்குகளும் எண்ணிக்கையில் காட்டப்படும் வாக்குகளும் ஒரே எண்ணிக்கையில் உள்ளனவா என்பதை ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ள வேண்டும். ஒவ்வொரு சுற்று வாக்கு எண்ணிக்கை முடியும் போதும் ஒவ்வொரு வேட்பாளர்களுக்கும் எத்தனை வாக்குகள் கிடைத்துள்ளன என்பதை எழுதி வைத்துக் கொண்டு அதை தேர்தல் அதிகாரியிடம் சமர்பிக்க வேண்டும். அதன்பின்னர் தான் அடுத்த சுற்று வாக்கு எண்ணிக்கை நடைபெறுமாறு பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஆதரவாக இருக்கிறார்களா
வாக்கு எண்ணும் பணியில் யாரேனும் மாற்றுக் கட்சியினருக்கு ஆதரவாகவும் முறைகேடாகவும் செயல்படுகிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து குறைகள் இருப்பின் சம்பந்தப்பட்ட மேலதிகாரிகளுக்கு உடனயைக தகவல் தெரிவித்து உரிய தீர்வினை காண வேண்டும்.
விழிப்புடன் இருங்கள்
திமுகவினர் தில்லுமுல்லு செய்வதிலும் வன்முறையில் ஈடுபடுவதிலும் கை தேர்ந்தவர்கள். எனவே வாக்கு எண்ணும் மையங்களில் திமுகவினரால் தில்லு முல்லு ஏதேனும் நடத்தப்படுகிறதா என்பதை விழிப்போடு கண்காணித்து அது சம்பந்தமாக மேலதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்து உரிய தீர்வு காண வேண்டும்.
முகவர்கள் கவனம்
அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் நியமிக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணிக்கை முகவர்கள் அனைவரும் உங்களின் வாக்கு எண்ணிக்கை மையங்களில் அனைத்து சுற்று வாக்கு எண்ணிக்கை நிறைவடைந்து முடிவு அறிவிக்கப்பட்ட பின்னர் தான் அங்கிருந்து வெளியே வரவேண்டும்.
ஈபிஎஸ்-ஒபிஎஸ்
அதிமுக மற்றும் தோழமை கட்சிகளின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களுக்கென நியமிக்கப்பட்டுள்ள சீப் ஏஜெண்டுகளும் தங்களுக்கான வாக்கு எண்ணும் மையங்களில் வாக்கு எண்ணும் பணி முறையாக நடைபெறுகிறதா என்பதை கண்காணிக்க வேண்டும்" இவ்வாறு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஒ பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.