சசிகலாவுக்கு எதிராக மீண்டும் தீர்மானம்..டிச.1-ல் அதிமுக செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றம்?
சென்னை: அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தைத் தொடர்ந்து வரும் டிசம்பர் 1-ந் தேதி அக்கட்சியின் செயற்குழுக் கூட்டம் கூட்டப்பட உள்ளது. இந்த கூட்டத்திலாவது அமைதியான முறையில் சில தீர்மானங்களை நிறைவேற்ற அதிமுக தலைவர்கள் முயற்சித்து வருக்கின்றனராம்.
அதிமுகவின் செயற்குழு டிசம்பர் 1-ந்தேதி கூடும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் கட்சியில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்த ஓபிஎஸ், இபிஎஸ் உள்ளிட்ட சீனியர்கள் முடிவு செய்துள்ளனராம். இது தொடர்பாகத்தான் இரு தலைவர்களும் தங்களது அணியினருடன் தீவிரமாக ஆலோசித்தும் வருகின்றனராம்.
மக்களே உஷார்.. அடுத்த 3 மணி நேரங்களுக்கு இந்த மாவட்டங்களில் இடியுடன் மழை வெளுக்கும்: வானிலை மையம்
மா.செ.க்கள் கூட்டத்தில் சலசலப்பு
அண்மையில் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டத்தில் வழிகாட்டும் குழு, சசிகலா சேர்க்கை ஆகியவற்றால் ஆகப் பெரும் பிரச்சனைகள் வெடித்தன. அதிமுக பெருந்தலைகளுக்குள் நடந்த வார்த்தை மோதல்கள், தகராறுகள், விரும்பத்தகாத பேச்சுகள் என ஏகத்துக்கும் நடந்த சம்பவங்களால் அதிமுகவின் இமேஜ் சரிந்தது. குறிப்பாக அன்வர் ராஜா, சி.வி.சண்முகம் இடையேயான மோதல் அதிமுக சீனியர்களை அதிர வைத்தது. அன்வர் ராஜாவை அடிக்க பாய்ந்தார் சி.வி.சண்முகம் என்கிற தகவல் பரவியதால் இனி அதிமுகவின் ஒவ்வொரு கூட்டமும் இப்படித்தான் களேபரங்களில் முடியும் போல என்கிற கருத்தும் உருவாகி இருப்பதாக கூறப்படுகிறது.
கேள்விக்குறியாகும் கட்டுப்பாடு
இந்த போக்கு அதிமுகவின் இரட்டை தலைமையின் கீழ் கட்டுப்பாடுகள் இல்லை என்பதை பட்டவர்த்தனமாக வெளிப்படுத்தி இருப்பதை அம்பலப்படுத்தியிருக்கிறது என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள். இந்த நிலையில், தான் கட்சியின் செயற்குழுவை கூட்டி விவாதிக்கலாம் என தீர்மானித்துள்ளனர் அதிமுக தலைவர்கள். இது தொடர்பாக ஓபிஎஸ், இபிஎஸ் இருவரும் தங்களது தரப்பினருடன் என்ன மாதிரியாக இந்த கூட்டத்தை அணுகுவது என ஆலோசிக்கின்றனராம்.
டிச.1-ல் அதிமுக செயற்குழு
இதன்படி டிசம்பர் 1-ந் தேதி அதிமுக செயற்குழுக் கூட்டம் நடைபெறும் என்று ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிவித்தனர். இந்த கூட்டத்தில் புதிய அவைத்தலைவர் தேர்வு, அமைப்புச் செயலாளர்களின் எண்ணிக்கையை குறைத்தல், வழிகாட்டும் குழுவின் எண்ணிக்கையை அதிகரித்தல் அல்லது கலைத்தல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்பட இருப்பதாக அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதேபோல, சசிகலா விவகாரத்துக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அக்கட்சி சீனியர்கள் கூறுகின்றனர்.
மீண்டும் சசிகலாவுக்கு எதிராக தீர்மானம்
குறிப்பாக, சசிகலா எந்த சூழலிலும் கட்சியில் சேர்த்துக்கொள்ளப்பட மாட்டார் என்றும், அவரை சேர்க்க வலியுறுத்துவது, ஆதரித்து பேசுவது என கட்சியினர் யாரும் செயல்படக்கூடாது என்றும் மீண்டும் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றவும் திட்டமிடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படி எல்லாம் சுமூகமாக நடந்துவிடுவதற்கு அதிமுகவின் ஏதோ ஒருதரப்பு விட்டுக் கொடுத்துவிடாதே என்கிற ஆதங்க புலம்பலையும் சில சீனியர் தலைவர்களிடம் கேட்கவும் முடிகிறது.