தேவரின் தங்க கவசம்.. கோஷ்டி மோதலில் கோட்டைவிடப் போகும் அதிமுக.. ஸ்கோர் அடிக்க நச் ஸ்கெட்சுடன் திமுக!
சென்னை: பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப் போவது அதிமுகவா? அல்லது திமுக அரசாங்கமா? என்கிற விவாதங்கள் எழத் தொடங்கியிருக்கின்றன. பசும்பொன் முத்துராமலிங்க தேவருக்கு தங்க கவசத்தை திமுக அரசு அணிவிக்க சத்தமில்லாமல் சில காய்கள் நகர்த்தப்படுகின்றன என்கிறது கோட்டை வட்டாரம்.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவை அக்டோபர் 30-ந்தேதி விமரிசையாக கொண்டாடுவது அதிமுகவின் வழக்கம். தேவர் சமூக அமைப்புகளும் விமரிசையாக விழா எடுப்பார்கள். அன்றைய தினம் அதிமுக சார்பில், பசும்பொன் முத்துரமாலிங்க தேவர் சிலைக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும். சுமார் 13 கிலோ எடையுள்ள இந்த தங்க கவசத்தை தனது ஆட்சியின் போது அதிமுக சார்பில் வழங்கியவர் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஒவ்வொரு ஆண்டும் தேவர் ஜெயந்தி விழாவின் போது, அதிமுகவின் பொருளாளராக இருப்பவர், மதுரையில் உள்ள பாங்க் ஆஃப் இந்தியா வங்கியில் இருக்கும் தங்க கவசத்தைப் பெற்று வந்து தேவருக்கு அணிவிக்க, பசும்பொன்னில் உள்ள தேவர் நினைவிட பொறுப்பாளர்களீடம் வழங்குவார். அந்த தங்க கவசம் தேவருக்கு அணிவிக்கப்படும். இந்த நிகழ்ச்சி முடிந்த பிறகு, மீண்டும் தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்படும். இது தான் நடைமுறை.
முத்துராமலிங்க தேவர் குரு பூஜை.. தங்க கவசத்திற்கு உரிமை கோரி ஓபிஎஸ் தரப்பு மனு
இபிஎஸ் கோஷ்டி மனு
தற்போது அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரத்தால் இபிஎஸ் அணி, ஓபிஎஸ் அணி என இரண்டாக பிளவுபட்டு இருக்கிறது. கட்சியின் பொருளாளராக ஓபிஎஸ் இருக்கிறார். ஆனால், அவரை நீக்கிவிட்டு திண்டுக்கல் சீனிவாசனை நியமித்தார் எடப்பாடி. இந்த நிலையில், அதிமுகவின் பொருளாளராக எடப்பாடியால் நியமிக்கப்பட்ட திண்டுக்கல் சீனிவாசன், முன்னாள் அமைச்சர்கள் ஆர்.பி.உதயக்குமார், செல்லூர் ராஜு ஆகிய இருவரையும் அழைத்துக்கொண்டு வங்கி மேலாளரை சந்தித்துள்ளார். அப்போது, தேவர் குரு பூஜை வருவதால் அன்றைய தினம் தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் நடைமுறைக்காக வங்கியில் உள்ள தங்க கவசத்தை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடிதம் கொடுத்துள்ளார் திண்டுக்கல் சீனிவாசன்.
சுதாரித்த ஓபிஎஸ் கோஷ்டி
இந்த விஷயமறிந்த ஓபிஎஸ் சட்டென்று சுதாரித்துக் கொண்டு, கட்சியின் பொருளாளர் நான் தான் ; அதனால் தங்க கவசத்தை என்னைத் தவிர வேறு நபர்களிடம் ஒபப்டைக்கக் கூடாது என்று ஒரு கடித்தத்தை தனது ஆதரவாளரான தர்மன் எம்.பி.யிடம் கொடுத்தனுப்பியுள்ளார். இந்த கடிதத்தை வங்கி மேலாளாரை சந்தித்து கொடுத்துள்ளார் தர்மர். தேவருக்கு அணிவிக்கும் தங்க கவசத்துக்கு இரு தரப்பும் இப்போதே மல்லுக்கட்டத் துவங்கியுள்ளது. என்ன முடிவு எடுப்பது ? யாரிடம் தங்க கவசத்தை ஒப்படைப்பது ? என குழம்பிப் போயிருக்கிறாராம் வங்கி மேலாளர்.
தமிழக அரசு ஆலோசனை
இந்த விவகாரம், முதல்வர் ஸ்டாலினின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறது. இப்படி ஒரு சிக்கல் உருவானால், அடுத்த நடைமுறை என்ன ? என்று விசாரித்திருக்கிறார் முதல்வர் ஸ்டாலின். அப்போது, இரு தரப்பினர் சொந்தம் கொண்டாடும் போது அதில் ஒரு முடிவை எடுக்க முடியாத போது, தங்க கவசத்தை அரசிடம் ஒப்படைக்க வேண்டும். அதாவது, மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைக்க வேண்டும். மாவட்ட ஆட்சியர், அரசின் சார்பில் தேவர் நினைவிட பொறுப்பாளர்களிடம் ஒப்படைப்பார் ; அரசு சார்பில் தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள் அதிகாரிகள்.
ஸ்கெட்ச் போட்ட திமுக
இதனையடுத்து இருவரையும் ஓரங்கட்டும் விதமாக தங்க கவசத்தை அரசிடம் ஒப்படைக்கும் வழிமுறைகளை காணலாம் என ஒரு யோசனையில் ஆழ்ந்துள்ளதாம் அரசு தரப்பு. அந்த வகையில், நான் தான் அதிமுக பொருளாளர் என இரு தரப்பினரும் மோதுவதால் பிரச்சனைகளைத் தவிர்க்க தங்க கவசத்தை மாவட்ட ஆட்சியரிடம் ஒப்படைத்து விடுகிறோம் என வங்கி மேலாளரே ஒரு முடிவினை எடுப்பது போல, அரசு தரப்பில் காய்கள் நகர்த்தப்படுகிறது என்கிறது கோட்டை வட்டாரம். இதற்கிடையே, தேவருக்கு தங்க கவசம் அணிவிக்கும் மரியாதையை நாம் இழந்து விடக்கூடாது என்றும், வங்கி நிர்வாகம் தங்க கவசத்தை தன்னிடம் ஒப்படைப்பதற்கான உதவிகளை தமிழக அரசு செய்ய வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலினிடம் கேட்பதற்கு ஓபிஎஸ் ஆலோசித்திருக்கிறார். விரைவில் இது குறித்து ஸ்டாலினிடம் அவர் பேசுவார் என்கிறார்கள் அவரது ஆதரவாளர்கள். ஆக, தங்க கவசத்தை வைத்து மீண்டும் வெடிக்கவிருக்கிறது அதிமுகவில் மற்றொரு பஞ்சாயத்து. தேவருக்கு தங்க கவசம் அணிவிப்பது அதிமுகவா ? அல்லது அரசாங்கமா? என்ற கேள்விகள் இப்போதே எதிரொலிக்கத் துவங்கி விட்டன.