இருப்பதோ 3 ராஜ்யசபா சீட்தான்.. இத்தனை பேர் கேட்டால் எப்படி.. குழப்பத்தில் அதிமுக.. என்ன நடக்குது?
சென்னை: ஒரு பக்கம் கூட்டணி கட்சிகள் ராஜ்யசபா எம்பி சீட்ட கேட்டு நெருக்கடி கொடுத்து வரும் நிலையில., அதிமுகவின் மூத்த தலைவர்களும் ராஜ்யசபா எம்பி சீட் கேட்டு போர்க்கொடி உயர்த்தி வருவதால் வேட்பாளர்களை அறிவிப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் மொத்தம் உள்ள 6 ராஜ்யசபா எம்பிக்களின் பதவி காலம் வரும் ஏப்ரல் 2ம் தேதியுடன் முடிவடைகிறது. இதையடுத்து புதிய எம்பிக்களை தேர்வு செய்வதற்கான தேர்தல் வரும் மார்ச் 26ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
எம்எல்ஏக்களே ஓட்டு போட்டு ராஜ்யசபா எம்பியை தேர்வு செய்வார்கள் என்பதால் வழக்கம் போல் தேர்தல் நடைபெற வாய்ப்பு இல்லை. அதிமுக திமுகவுக்கு எம்எல்ஏக்களின் பலம் அடிப்படையில் தலா 3 எம்பிக்களை போட்டியின்றி தேர்வு செய்யவே வாய்ப்பு உள்ளது. திமுக நேற்று தனது மூன்று வேட்பாளர்களையும் அறிவித்துவிட்டது. ஆனால் அதிமுக இன்னமும் அறிவிக்கவில்லை. எல்லாரும் கேட்பதால் ஆலோசித்து முடிவெடுக்க திட்டமிட்டுள்ளது.
அன்புமணி எம்பி
கடந்த முறை லோக்சபா தேர்தலின் போது யாரும் எதிர்பாராத விதமாக பாமகவை கூட்டணியில் சேர்த்து அதிரவைத்தது அதிமுக. அத்துடன் பாமகவுக்கு 7 லோக்சபா தொகுதிகளும், ஒரு ராஜ்யசபா சீட்டும் தருவதாக ஒப்பந்தம் செய்ததது. இதன்படி கடந்த முறை நடந்த ராஜ்யசபா தேர்தலில் பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி போட்டியின்றி ராஜ்யசபா எம்பியாக தேர்வு செய்யப்பட்டார்.
சுதீஷ் கோரிக்கை
அப்போது தேமுதிக நாங்களும் பாமகவுக்கு நிகரான கட்சி தான் எங்களுக்கும் அந்த கட்சிக்கு நிகராக சீட் ஒதுக்க வேண்டும் என்று தேமுதிக நெருக்கடி கொடுத்தது. அத்துடன் ராஜ்யசபா எம்பி சீட்டும் கேட்டது. ஆனால் பாமகவை விட குறைவாகவே அதாவாது 4 சீட்டுகளை மட்டுமே ஒதுக்கிய அதிமுக, கூட்டணிக்கு வாங்க.. தேர்தலுக்கு பின்னர் ராஜ்யசபா எம்பி குறித்து பார்த்துக்கலாம் என்று கூறியது. இதனால் அப்போது சமாதானம் அடைந்த தேமுதிக இப்போது தேமுதிகவுக்கு ராஜ்யசபா எம்பி சீட் வேண்டும் என்று கேட்டு வருகிறது. தேமுதிக சார்பில் எல்கே சுதீஷ் அண்மையில் முதல்வர் பழனிச்சாமியை அவரது இல்லத்துக்குக்கே போய் சந்தித்து கோரிக்கை வைத்தார். ஆனால் எந்த உத்தரவாதமும் முதல்வர் அளிக்கவில்லை என கூறப்படுகிறது.
பாஜகவும் முயற்சி
இதனால், தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கடும் வருத்ததில் இருக்கிறார். இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிக்கு பாடுபட்ட தங்கள் கட்சிக்கு. ராஜ்யசபா எம்பி சீட் ஒதுக்காவிட்டால் கடுமையான முடிவை எடுக்கும் மனநிலையில் இருப்பதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் என்றால பாஜவும் சீட் கேட்பதாக கூறுகிறார்கள். ராஜ்யசபா எம்பி சீட் வாங்கி அதன் மூலம் அமைச்சரவையில் இடம் பெறலாம் என எதிர்பார்க்கிறது. பொன்.ராதாகிருஷ்ணன், சி.பி.ராதாகிருஷ்ணன் ஆகியோரில் ஒருவருக்கு வாய்ப்புகள் கிடைக்குமா என தமிழக பாஜக முயற்சித்து வருகிறதாம். இது ஒருபுறம் எனில் தாமாகா தலைவர் ஜி.கே.வாசன் ராஜ்யசபா எம்பி சீட் தர வேண்டும் என்று பாஜக மூலம் காய்நகர்த்தி வருகிறாராம். இதனால், அதிமுக கூட்டணியில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தம்பித்துரை கேட்கிறார்
கூட்டணியை விடுத்து அதிமுக கட்சிக்குள் பார்த்தால் அதிமுக மூத்த தலைவர்களான தம்பித்துரை, கே.பி.முனுசாமி, மைத்ரேயன், நத்தம் விஸ்வநாதன் உள்ளிட்டோர் எம்பி சீட் கேட்க ஆரம்பித்துள்ளார்களாம். அதே நேரத்தில் முன்னாள் அமைச்சர்கள் சிலரும் தங்களுக்கு சீட் தர வேண்டும் என்று கேட்கிறார்களாம். இதேபோல், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த அதிமுக தலைவர்கள் எம்பி சீட் கேட்டு வருகிறார்களாம்
விரைவில் முடிவு
இதனால், யாருக்கு சீட் தர வேண்டும் என்ற குழப்பத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் துணை முதல்வர் ஒபிஎஸ்சும் இருப்பதாக சொல்கிறார்கள் இருவரும் கட்சியின் நிர்வாகிகள் கூட்டத்தை விரைவில் கூட்டி ஆலோசனை நடத்த முடிவு செய்துள்ளார்களாம். கடந்த முறையைப் போலவே இந்த முறையும் தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கலுக்குள் எம்பி வேட்பாளரை இருவரும் அறிவிப்பாளர்கள் என தெரிகிறது.