எம்எல்ஏவே இல்லாத கட்சி.. தம்பிதுரை தாக்கு.. பிரேமலதாவிற்கு அதிமுக தலைவர்கள், அமைச்சர்கள் பதிலடி
Recommended Video
சென்னை: தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த்தின் பிரஸ் மீட் கருத்துக்கு அதிமுக மூத்த தலைவர்கள் மற்றும் அமைச்சர்கள் பதிலடி கொடுத்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரேமலதா நேற்று எந்த நேரத்தில் பிரஸ் மீட் செய்தாரோ, எல்லாமே ஏடாகூடமாக போய்க் கொண்டுள்ளது. பிரேமலதாவின் பேச்சு, தோரணை போன்றவை பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இதையடுத்து, அதிமுக வட்டாரத்திலும், பிரேமலதா பேச்சுக்கு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
நிறுத்திக்கொள்ளுங்கள்.. அல்லது முழு விவரங்களை வெளியே சொல்வோம்.. பிரேமலதாவை எச்சரிக்கும் சந்திரகுமார்
அதிரடி
தேமுதிக தயவால்தான் அதிமுக ஆட்சி நடைபெறுவதாக பிரேமலதா நேற்று தெரிவித்திருந்தார். இந்த நிலையில் தேமுதிக ஒரு எம்எல்ஏ கூட இல்லாத கட்சி என்று வாழைப்பழத்தில் ஊசி ஏற்றுவது போல விமர்சனத்தை தெரிவித்துள்ளார் தம்பிதுரை.
சட்டசபையில் எம்எல்ஏ இல்லையே
கரூரில் நிருபர்களிடம் பேசிய தம்பிதுரை கூறியதாவது: அதிமுகவுக்கு போதிய சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். சட்டமன்றத்தில் இருக்கும் எம்எல்ஏக்களை வைத்துதான் ஆட்சி நடத்த முடியுமே தவிர, சட்டமன்றத்தில் இல்லாத கட்சியின் தயவை வைத்து ஆட்சி நடத்த முடியாது. தார்மீக ரீதியில் வேண்டுமானால் அது போன்ற கட்சிகள், ஆளும் கட்சிக்கு ஆதரவு அளிக்கலாம். உதவி வேண்டுமானால் செய்ய முடியும். ஆனால் சட்டமன்றம் தான் ஆட்சி நடத்த அதிகாரம் உள்ள இடம். அங்கு அதிமுக பெரும்பான்மையாக உள்ளது என்று அவர் தெரிவித்தார்.
ஆயிரம், ஐநூறு ஓட்டுகள்
கோவை உக்கடம் பகுதியில், பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டும் விழாவில் பங்கேற்ற அதிமுக எம்எல்ஏ கனகராஜ் கூறியதாவது: கூட்டணி என்று வந்துவிட்டால் ஆயிரம் ஓட்டு, 500 ஓட்டு போன்றவை கூட முக்கியம் தான். எனவே தேமுதிகவுடன் கூட்டணி வைக்க நினைக்கிறோம். ஜெயலலிதா முன்பாக விஜயகாந்த் நாக்கை துருத்தி பேசிய பிறகுதான் அவரது கட்சிக்கு வீழ்ச்சி உருவானது என்று விளாசினார்.
அமைச்சர் ஜெயக்குமார் பேட்டி
இதனிடையே சென்னை தரமணியில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார் இது பற்றி கூறுகையில், கூட்டணி பற்றி இனிமேல் தேமுதிகதான் முடிவு செய்ய வேண்டும். எங்களை பொறுத்த அளவில் பேச்சுவார்த்தை முடிந்து விட்டது. தேமுதிக தயவால் அதிமுக ஆட்சியில் இருப்பதாக கூறுவதை ஏற்க முடியாது என்றார். ஜெயக்குமாரின் இந்த பேட்டியின் போது முன்னாள் தேமுதிக பிரமுகரும் தற்போதைய அமைச்சருமான மாபா பாண்டியராஜன் உடனிருந்தார்.