ஆண்மை இல்லாதவர்கள், பிச்சைக்காரர்கள்... தொடர்ந்து விளாசும் குருமூர்த்தி.. கடிவாளம் போடுமா அதிமுக?
Recommended Video
சென்னை: அதிமுகவினரை ஆண்மை இல்லாதவர்கள் என்று விமர்சித்த துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி, இப்போது பிச்சைக்காரர்கள் என கார்ட்டூன் போட்டு அதிர வைத்திருக்கிறார். குருமூர்த்தியின் தொடரும் இந்த ஏகடியங்களுக்கு கடிவாளமே இல்லையா? என நொந்து கிடக்கின்றனர் அதிமுக தொண்டர்கள்.
அதிமுகவை விமர்சித்தால் எப்படி பதிலடி கிடைக்கும் என்பதை ஜெயலலிதா முதல்வராக இருந்த போது சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் சுப்பிரமணியன் சுவாமிக்கு வெளிப்படுத்திக் காட்டியது அக்கட்சி மகளிரணி. (அந்த மகளிர் அணியின் தலைவி வளர்மதி இப்போதும் அதிமுகவில்தான் இருக்கிறார்). தமிழக வரலாற்றில் இன்றளவும் பேசுபொருளாக இருக்கிறது அந்த மகளிரணியின் போராட்டம்.
ஜெயலலிதா மாட்டுக் கறி சாப்பிடுவார் என நக்கீரன் ஏடு எழுதியது. பதறி எழுந்த அதிமுக தொண்டர்கள், நக்கீரன் அலுவலகத்தை முடக்கினர். அது ஏற்கக் கூடிய செயல் அல்ல. ஆனால் கட்சியையும் கட்சி தலைமையையும் விமர்சித்தால் எப்படி அதிமுக கொந்தளிக்கும் என்பதை வெளிப்படுத்திய காட்சிகள் இவை.
தமிழிசையின் நீட் தற்கொலை தொடர்பான ட்வீட்- கோபத்தை மொத்தமாக காட்டிய நெட்டிசன்கள்!
அர்ச்சனை வார்த்தைகள்
இப்போது ஜெயலலிதா எனும் ஆளுமை இல்லை.. அதிமுகவினரின் வரிகளில் சொல்வாதானால் தாயில்லா பிள்ளைகள்... அதனால்தான் குருமூர்த்தி போன்றோர் ஏகத்துக்குமாக கடும் சொற்களால் அர்ச்சிக்கிறார்கள். ஆனாலும் அதிமுக அமைதி காத்து கொண்டே இருக்கிறது.
ஆண்மையற்றவர்கள்
ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலுக்குப் பின்னர் அதிமுகவில் களை எடுப்பு நடவடிக்கை தொடங்கியது. அதிமுகவில் இருந்து 9 பேர் நீக்கப்பட்டனர். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்ட குருமூர்த்தி, தேர்தல் முடிவடைந்து 9 மாதங்கள் கழித்து நடவடிக்கை எடுக்கிறார்கள்.. ஆண்மையற்ற அதிமுக தலைவர்கள் என வசைபாடி இருந்தார். இதற்கு அதிமுகவில் இருந்து பெரிய எதிர்ப்பு எதுவும் வரவில்லை. அமைச்சர் ஜெயக்குமார் மட்டும், ஆடிட்டர் குருமூர்த்திக்கு முகம் என்பதே கிடையாது. ஆண்மை இல்லாதவர்கள் அதைபற்றி பேசுவார்கள். இவ்வளவு கீழ்தரமான வார்த்தைகளை பேசுவது ஜனநாயகத்தில் வெட்கி தலை குனிய வேண்டியது என திட்டித் தீர்த்தார்.
மீண்டும் விமர்சனம்
ஆனாலும் அசராத குருமூர்த்தி, ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் அரசுக்கு நான் ஆலோசனை வழங்குகிறேன் என்ற தவறான எண்ணத்தை நீக்கியதற்கு அமைச்சர் ஜெயக்குமாருக்கு நன்றி. ஒரு எழுத்தாளராக கட்சிகள் குறித்து எனது கருத்துக்களை, அவர்கள் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் தொடர்ந்து சொல்வேன். அதிமுக தலைமை பலவீனமானது என்ற எனது கருத்து புதிதல்ல என மீண்டும் எகிறினார். இதற்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாக சலசலப்பு வந்ததுடன் சரி அவ்வளவுதான்.
அதிமுகவும் பிச்சைக்காரர்களும்
இப்போது மிகவும் இழிவாக, பிச்சை எடுப்பவர்கள் என விமர்சித்து துக்ளக் வார இதழில் கார்ட்டூன் போட்டிருக்கிறார் குருமூர்த்தி. அதிமுகவை இவ்வளவு மகா கேவலமாக திட்டிக் கொண்டும் வசைபாடிக் கொண்டிருக்கிறார் குருமூர்த்தி. அதிமுகவின் பரமவைரியான திமுக கூட இப்படியான சொற்களை பயன்படுத்துவது இல்லை.
குருமூர்த்திக்கு கடிவாளம்?
ஆனால் அதிமுக தூக்கி சுமக்கும் பாஜகவின் ஆதரவாளரான குருமூர்த்தி இவ்வளவு மோசமான வார்த்தைகளை வீசுகிறார்.. ஆனாலும் வழக்கம் போல பவ்யமாக பணிந்து போய் கொண்டிருக்கிறது அதிமுக. தாயில்லா பிள்ளை என்பதால் எடுப்பார் கைப்பிள்ளையாக அதிமுக மாறிவிட்டது என்பதை மீண்டும் மீண்டும் அக்கட்சித் தலைவர்கள் உறுதிப்படுத்துகின்றனர். இது எஞ்சியிருக்கும் அதிமுக தொண்டர்களின் மன உறுதியை சிதைத்துவிடும் என்பதை அக்கட்சித் தலைமை உணர வேண்டும்.