வெள்ளந்தி மனிதர்.. மனதில் பட்டதை சொல்பவர்.. தேமுதிகவை செமையாக கலாய்த்தவர்.. அவர்தான் கனகராஜ்
Recommended Video
சென்னை: மறைந்த சூலூர் எம்எல்ஏ கனகராஜ் ரொம்பவே வெள்ளந்தி மனிதர். யதார்த்தமாக பேசக்கூடியவர். இப்படித்தான் அவர் சமீபத்தில் தேமுதிகவை கலாய்த்து பேசிய ஒரு வார்த்தையும் வைரலாக சுற்றி வந்தது.
இம்மாத துவக்கத்தில், அநேகமாக 9ம் தேதியாக இருக்கலாம். அதிமுகவுடன் கூட்டணி சேர தேமுதிக முயற்சி செய்த காலகட்டம் அது. ஆனால் அதற்கு ஒரு நாள் முன்புதான், பேட்டியளித்த தேமுதிக பொருளாளர், பிரேமலதா விஜயகாந்த், அதிமுக எம்பிக்களையும், ஜெயலலிதாவையும் விமர்சனம் செய்து கருத்துக்களை தெரிவித்திருந்தார்.
இதனால் அதிமுக தலைவர்கள் அதிர்ச்சியடைந்தாலும், வெளிப்படையாக அதை காட்டவில்லை. ஆனால், கனகராஜ் தனது மனதில் பட்டதை அப்படியே போட்டு உடைத்துவிட்டார்.
கலகலப்பு, கெத்து, ஆர்ப்பாட்டம், அடாவடி.. கடைசிவரை சலசலப்போடு வாழ்ந்து மறைந்த சூலூர் கனகராஜ்
சரியில்லை
அவர் அப்போது சொன்னது மீண்டும் உங்கள் பார்வைக்கு.. தேமுதிக, தமிழகத்தில் திமுக மற்றும் அதிமுக ஆகிய இரு கட்சிகளுடனும் கூட்டணி பேசுவது மிகப்பெரிய தவறு. இங்கொன்றும், அங்கொன்றுமாக பேச்சுவார்த்தை நடத்துவது முறையான நடைமுறை கிடையாது.
500 ஓட்டு
தேமுதிகவால் தொகுதிக்கு 500 அல்லது 1000 வாக்குகள் கிடைக்கும். அரசியலில் இந்த வாக்குகளும் முக்கியம்தான் என்பதால் கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். மதிமுகவுக்கு கூட தொகுதிக்கு 500 ஓட்டுகள்தான் இருக்கும். அவர்களும் திமுக கூட்டணியில் இருக்கிறார்கள்.
விஜயகாந்த் செய்தது தப்பு
எதிர்க்கட்சி தலைவராக விஜயகாந்த்தை உயர்த்தியவர் ஜெயலலிதா. ஆனால் சட்டமன்றத்தில் நாகரீகம் இல்லாமல் விஜயகாந்த் நாக்கை துருத்தி நடந்துகொண்டதே தேமுதிக வீழ்ச்சிக்கு காரணம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
அதிமுகவுக்கு இழப்பு
கூட்டணிக்கு பேச்சுவார்த்தை நடந்தபோதே, தனது மனதில் பட்டதை ஒளிவு மறைவு இல்லாமல் வெளிப்படையாக பேசியவர்தான் கனகராஜ். தனது கட்சிக்கு ஒருவரால் கெட்ட பெயர் என்றால் தாங்க முடியாமல் தனது ஆதங்கத்தை கொட்டித் தீர்த்தவர்தான் கனகராஜ். அவரது மறைவு, கண்டிப்பாக அதிமுகவுக்கு பெரும் இழப்பு என்பதை மறுக்க முடியாது.