வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது.. ஸ்டாலின்தான் அரசியல் செய்கிறார்.. முதல்வர் பழனிசாமி அதிரடி!
சென்னை: வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது, திமுக தலைவர் ஸ்டாலின்தான் இதில் அரசியல் செய்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார்.
மத்திய அரசு லோக்சபாவில் தாக்கல் செய்த மூன்று விவசாய மசோதாக்கள் பெரிய அளவில் விமர்சனங்களை சந்தித்து உள்ளது. மக்களவையில் இந்த மசோதாக்கள் வெற்றிபெற்ற நிலையில் நாளை மாநிலங்களவையில் இந்த மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.
மத்திய அரசு தாக்கல் செய்த விவசாயிகள் உற்பத்தி வணிகம் மற்றும் வர்த்தக (பதவி உயர்வு மற்றும் வசதி) மசோதா, 2020, விலை உறுதி மற்றும் பண்ணை சேவைகள் மசோதா (அதிகாரமளித்தல் மற்றும் பாதுகாப்பு) ஒப்பந்தம், 2020, அத்தியாவசிய பொருட்கள் (திருத்தம்) மசோதா, 2020 ஆகிய மசோதாக்களை எஸ்ஏடி கட்சி எதிர்த்து இந்த முடிவை எடுத்துள்ளது.
ஆட்டம் முடிகிறது, 6 மாதத்தில் விடிகிறது!.. சட்டமன்ற நாடகத்திற்கு திரைபோடும் மக்கள் மன்றம்.. ஸ்டாலின்
ஸ்டாலின் எதிர்ப்பு
இந்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து ஷிரோமணி அகாலி தளம் கட்சியை சேர்ந்த மத்திய அமைச்சர் ஹர்சிம்ரத் கெளர் பாதல் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார். அதேபோல் தமிழகத்தில் இந்த மசோதாக்களை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்த்து உள்ளது. திமுக தலைவர் ஸ்டாலின் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து உள்ளார். இதற்காக செப்டம்பர் 21ம் தேதி திமுக சார்பாக அனைத்து கட்சி கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
உத்தரவிட்டார்
இந்த நிலையில் வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது, திமுக தலைவர் ஸ்டாலின்தான் இதில் அரசியல் செய்கிறார் என்று முதல்வர் பழனிசாமி விமர்சனம் செய்துள்ளார். அதில், வேளாண் மசோதா விவசாயிகளை பாதிக்காது. இதனால் விவசாயத்திற்கு சிக்கல் இல்லை. விவசாயிகளை பாதிக்கும் எந்த அம்சங்களும் வேளாண் மசோதாவில் இல்லை. மக்களவையில் நிறைவேறி உள்ள விவசாய சட்டங்களால் மக்கள் நலன் அடைவார்கள்.
சட்டம் நல்லது
இதனால் இதை எதிர்க்க கூடாது. இந்த சட்டங்கள் மூலம் தமிழக விவசாயிகளுக்கு உறுதியான வருவாய் கிடைத்து நன்மை பயக்கும். விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டங்களை ஸ்டாலின் அரசியலாக்குகிறார். நான் என்னை விவசாயி என்று சொல்வதை அவர் விமர்சனம் செய்து இருக்கிறார்.
விவசாய சட்டம்
நான் விவசாயிதான். ஒருமுறை அல்ல, ஓராயிரம் முறை நான் என்னை விவசாயி என்று சொல்வேன். என்னை விவசாயி என்று கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். தமிழக விவசாயிகளுக்கு நன்மை பயக்கும் வேளாண் சட்டத்தை அரசியலாக்குவதா?, என்று முதல்வர் பழனிசாமி தெரிவித்துள்ளார்.