ராஜ்யசபா தேர்தல் - பாமகவுக்கு 1 இடம் வழங்கப்படும்- அதிமுக அறிவிப்பு!
சென்னை: ராஜ்யசபா தேர்தலில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு உறுதி அளித்தபடி ஒரு இடம் வழங்கப்படும் என அதிமுக அறிவித்துள்ளது.
லோக்சபா தேர்தல் கூட்டணியின் போது அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு ஒரு இடம் வழங்க ஒப்பந்தம் போடப்பட்டது. ஆனால் லோக்சபா தேர்தலில் பாமக படுதோல்வி அடைந்தது.
இதனால் பாமகவுக்கு உறுதி அளிக்கப்பட்ட ஒரு இடம் ஒதுக்கப்படாது என அதிமுக வட்டாரங்களில் கூறப்பட்டது. இதையடுத்து அதிமுக அரசு மீது பாமக தமது சீற்றத்தைக் காட்டத் தொடங்கியது.
இதனிடையே திமுக கூட்டணியில் ராஜ்யசபா வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டனர். திமுக சார்பாக தொமுச சண்முகம், வழக்கறிஞர் வில்சன் ஆகியோர் வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டுள்ளனர். மற்றொரு இடம் மதிமுகவுக்கு என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ராஜ்யசபா தேர்தலில் பாமகவுக்கு உறுதி அளித்தபடி ஒரு இடம் வழங்கப்படும் என்றார். இதனையடுத்து பாமக தரப்பு மகிழ்ச்சி அடைந்துள்ளது.
லோக்சபா தேர்தலில் தோல்வி அடைந்த அன்புமணி ராமதாஸ், அதிமுக தயவில் ராஜ்யசபா எம்.பி.யாக இருக்கிறார்.