அதிமுக செயற்குழு- பொதுச்செயலாளர், முதல்வர் வேட்பாளர்- ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் காரசார விவாதம்!
சென்னை: சென்னையில் தற்போது நடைபெற்று வரும் அதிமுக செயற்குழுக் கூட்டத்தில் பொதுச்செயலாளர் பதவி, முதல்வர் வேட்பாளர் ஆகியவை குறித்து காரசாரமாக விவாதிக்கப்படுகிறது.
அதிமுகவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தனி அணியாக செயல்பட்டு வந்தார். முதல்வர் எடப்பாடி தலைமையிலான அரசின் நம்பிக்கை வாக்கெடுப்பில் எதிர்த்தும் வாக்களித்தார். பின்னர் டெல்லியில் முயற்சியால் இருதரப்பும் ஒன்றாக இணைந்தனர்.
ஆட்சியில் மட்டுமல்ல கட்சியிலும் ஓங்கிய இ.பி.எஸ். கை.. எதிர்பாராத திருப்பங்களால் பரபரக்கும் அதிமுக..!
மீண்டும் கோஷ்டிகள்
என்னதான் இரு அணிகள் இணைந்தாலும் முதல்வர் எடப்பாடி தரப்பு தம்மை வலிமையாக்கிக் கொண்டது. ஓபிஎஸ் தலைமையிலான அணியில் இருந்த பலரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவினர். ஆனால் திடீரென அதிமுகவின் முதல்வர் வேட்பாளர் யார் என்கிற விவகாரத்தை முன்வைத்து அதிமுகவில் மீண்டும் கோஷ்டி பூசல் வெடித்தது.
பொதுச்செயலர், முதல்வர் வேட்பாளர் யார்?
அதிமுகவில் மீண்டும் ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் புதிய புதிய ஆதரவாளர்களுடன் உருவாகி உள்ளது. ஓபிஎஸ்-தான் முதல்வர் வேட்பாளர் என சில அமைச்சர்களும் ஆதரவு தெரிவிக்கின்றனர். ஆனால் முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமிதான் என்று அவரது ஆதரவாளர்கள் உறுதியாக உள்ளனர்.
அதிமுக செயற்குழு
இன்னொரு பக்கம் பொதுச்செயலாளராக ஓபிஎஸ்- முதல்வர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி என்கிற பார்முலாவும் முன்வைக்கப்படுகிறது. ஆனாலும் இருதரப்பும் ஆட்சியும் கட்சியும் தங்களது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என்று காய்நகர்த்துகின்றனர். இது தொடர்பாக டெல்லிக்கு சென்று சில அமைச்சர்கள் பேச்சுவார்த்தையும் நடத்தி வந்துள்ளனர். இந்த விவகாரங்கள்தான் தற்போதைய அதிமுக செயற்குழுவில் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.
மதுசூதனனுடன் ஓபிஎஸ் ஆலோசனை
இந்த நிலையில் அதிமுக அவைத்தலைவர் மதுசூதனனை ஓபிஎஸ் திடீரென சந்தித்து பேசினார். மதுசூதனனுக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் அவரை சந்தித்து நலம் விசாரித்தார் ஓபிஎஸ் என கூறப்படுகிறது. இருப்பினும் நாளை நடைபெறும் செயற்குழு கூட்டம் தொடர்பாகவே மதுசூதனனுடன் ஓபிஎஸ் ஆலோசனை நடத்தியதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.