விஸ்வரூபம் எடுக்கும் கலகக் குரல்... வரும் 12-ல் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்!
சென்னை: அதிமுகவுக்கு ஒற்றை தலைமை தேவை என்ற குரல் விஸ்வரூபம் எடுத்திருக்கும் நிலையில் அக்கட்சியின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெற உள்ளது.
அதிமுகவில் ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் பொதுச்செயலர் பதவி காலியாக உள்ளது. தலைமை ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈபிஎஸ் என அதிமுக கூட்டுத் தலைமையின் கீழ் அதிமுக இயங்கி வருகிறது.
ஆட்சியிலும் கட்சியிலும் தமது கை ஓங்கி இருக்க வேண்டும் என்பது முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வியூகம். அதே நேரத்தில் கட்சியில் தமது கை ஓங்க வேண்டும் என நினைக்கிறார் துணை முதல்வர் ஓபிஎஸ்.
தற்போது அதிமுக ஈபிஎஸ், ஓபிஎஸ் அணிகளாகத்தான் இருக்கிறது. இந்நிலையில்தான் அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை தேவை; கூட்டுத் தலைமையால் முடிவுகள் எடுப்பதில் தாமதம் ஏற்படுகிறது என மதுரை வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா போர்க்கொடி தூக்கினார்.
அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை... ராஜன் செல்லப்பா கலக குரலுக்கு குன்னம் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஆதரவு!
அவருக்கு ஆதரவாக குன்னம் எம்.எல்.ஏ.ராமச்சந்திரனும் குரல் கொடுத்திருக்கிறார். ஆனால் அமைச்சர்களோ முதல்வர் ஓபிஎஸ்ஸை ஆதரிக்கின்றனர். இதனால் அதிமுகவில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அதிமுகவின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 12-ந் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் எம்.எல்.ஏ.க்களும் பங்கேற்க உள்ளனர். இந்த கூட்டதிலும் ஒற்றைத் தலைமைதான் தேவை என்கிற குரல் எழக் கூடும் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக பார்க்கப்படுகிறது.