ரஜினி, சசிகலா விவகாரங்களில் நினைத்தது நடக்கலை..கேட்ட தொகுதிகளாவது அதிமுக தருமா? பாஜக பரிதவிப்பு
சென்னை: ரஜினிகாந்த், சசிகலா ஆகியோரை முன்வைத்து போட்ட திட்டம் எதுவும் கை கொடுக்காத நிலையில் அதிமுகவின் தோளில் ஏறி கெட்டியாக உட்கார்ந்து கொண்டு சவாரி செய்கிறது பாஜக. அதேநேரத்தில் விரும்புகிற தொகுதிகளை எல்லாம் அதிமுக கொடுத்துவிடுமா? என்ற பரிதவிப்புடன் இருக்கிறது பாஜக.
தமிழகத்தில் திமுக, அதிமுகவுக்கு மாற்றான கட்சியாக காலூன்றத்தான் பாஜக முயற்சித்தது. இதற்காக ஒருகாலத்தில் கழகங்கள் இல்லாத தமிழகம் என கோஷம் போட்டும் பார்த்தது பாஜக.
ஆனால் தமிழக வாக்காளர்கள் பாஜகவை கிஞ்சித்தும் மதிக்காமல் தூக்கி எறிந்தனர். இதனால் வேறுவழியே இல்லாமல் நடிகர் ரஜினிகாந்தை களமிறக்கி விளையாடலாம் என கோதாவில் குதித்தது பாஜக. நடிகர் ரஜினிகாந்தும் இதோ வந்துட்டேன்.. அதோ வந்துட்டேன் என சொல்லிக் கொண்டே ஜகாவாங்கிவிட்டார்.
குட்பை சொன்ன ரஜினி
இப்போது கொரோனாவை முன்வைத்து ரஜினிகாந்த் அரசியலுக்கு வரப்போவதில்லை என உறுதியான நிலையில் அவரை கை கழுவிவிட்டது பாஜக. ரஜினிகாந்த் கை நழுவிப் போன நிலையில் ஒருகாலத்தில் எதிரியாக பார்த்த சசிகலாவை வெளியே கொண்டுவந்து அதிமுகவை பிடிக்குள் கொண்டுவரலாம் என்கிற முயற்சியையும் எடுத்தது பாஜக.
பிடி கொடுக்காத சசிகலா
ஆனால் சபதம் போட்டு ஜெயிலுக்கு போன சசிகலா, இத்தனை ஆண்டுகள் சிறைவாசத்தை அனுபவித்தாச்சு.. இனி என்ன உறவு என்கிற ரேஞ்சில் பிடி கொடுக்கவில்லை. ரஜினிகாந்தும் சிக்கலை.. சசிகலாவும் பிடிகொடுக்கவில்லை.. வேறவழியே இல்லாமல் அதிமுகவின் முதுகில் ஏறுவதுதான் ஒரே வழி என இறங்கி வந்துவிட்டது பாஜக.
புகழாரம் சூட்டிய அமித்ஷா
எந்த ஜெயலலிதாவின் ஆட்சியை ஊழல் ஆட்சி என எந்த அமித்ஷா விமர்சித்தாரோ அதே ஜெயலலிதாவுக்கு அதே அமித்ஷா புகழாரம் செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. அதிமுகவை பிடிக்கு கொண்டு வந்துவிட்ட பாஜகவால் விரும்புகிற தொகுதிகளை பெற்றுவிடத்தான் முடியுமா? ஜெயிக்கிற தொகுதிகளை எல்லாம் சுலபமாக அதிமுக தூக்கி கொடுத்துதான் விடுமா? என்கிற பரிதவிப்பு பாஜகவிடம் உள்ளது.
அதிமுக தொண்டர்கள் நிலை?
இந்த சட்டசபை தேர்தலில் எப்படியும் சில பாஜக எம்.எல்.ஏக்கள் சட்டசபைக்குள் நுழைந்தே தீருவார்கள் என கங்கணம் கட்டிக் கொண்டு பேசுகின்றனர் பாஜக தலைவர்கள். அதிமுக வாக்கு வங்கி மீது அபார நம்பிக்கையை வைத்துதான் இப்படி எல்லாம் பாஜக தலைவர்கள் பேசுகிறார்கள். அதிமுக தலைமைகளுக்கு வேண்டுமானால் பாஜகவை தூக்கி சுமக்க வேண்டிய நெருக்கடி இருக்கலாம். ஆனால் கட்சி தொண்டர்களுக்கு பாஜகவையும் ஜெயிக்க வைக்க வேண்டும் என்கிற எந்த வேண்டுதலும் இல்லை. இந்த யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமலேயே பாஜக தலைவர்கள் பேசுவது பரிதாபத்துக்குரியதாகத்தான் இருக்கிறது