சட்டசபைத் தேர்தல் 2021: அதிமுகவில் இன்று நேர்காணல் - மகாசிவராத்திரி நாளில் வேட்பாளர் பட்டியல்?
அதிமுக சார்பில் போட்டியிடுவோருக்கான நேர்காணல் காலை 9 மணிக்கு தொடங்கியது. மொத்தம் 8240 விருப்பமனுக்கள் பெறப்பட்டுள்ள நிலையில் விருப்பமனுக்கள் வழங்கிய அனைவரிடமும் இன்று ஒரே நாளில் நேர்காணல் நடைபெறுகிறது.
சென்னை: சட்டசபைத் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 8240 பேர் விருப்ப மனு தாக்கல் செய்துள்ளனர். போட்டியிட விருப்பம் தெரிவித்த மனு தாக்கல் செய்தவர்களிடம் ஒரே நாளில் இன்று நேர்காணல் நடைபெறுகிறது. அதிமுகவில் அமைக்கப்பட்டுள்ள 9 பேர் கொண்ட குழுவினர் நேர்காணல் நடத்துகின்றனர். புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களிடமும் இன்று நேர்காணல் நடைபெறுகிறது.
சட்டசபைத் தேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிட விரும்புபவர்களிடம் இருந்து கடந்த பிப்ரவரி 24ஆம் தேதி முதல் விருப்பமனு பெறப்பட்டது. அதிமுக தொண்டர்கள் பலரும் நேற்று வரை விருப்பமனு தாக்கல் செய்தனர்.
புதன்கிழமை மாலை 5 மணியுடன் விருப்ப மனு தாக்கல் நிறைவடைந்தது. மொத்தம் 8240 பேர் விருப்ப மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். விருப்ப மனுக்களை பெற்ற அதே வேகத்துடன், நேர்காணலையும் விரைவாக நடத்தி முடிக்க அதிமுக திட்டமிட்டுள்ளது.
கூட்டணிக்காக தேமுதிக கெஞ்சவில்லை..2011இல் நாம் இல்லையென்றால்..அதிமுக இன்று இருக்காது.. சுதீஷ் பேச்சு
வேட்பாளர்கள் தேர்வு
தமிழக சட்டசபைத் தேர்தல் ஏப்ரல் 6 ஆம் தேதி நடைபெற உள்ளது. வேட்புமனு தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்குகிறது. முக்கிய அரசியல் கட்சிகள் வேட்பாளர் தேர்வு, கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை, தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன.
தொகுதிப்பங்கீடு
அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாமகவுக்கு 23 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடந்து வருகின்றது. திமுக தரபில் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்று வருகின்றது. அந்த வகையில், திமுக வேட்பாளர் நேர்காணல் மூன்றாவது நாளாக இன்றும் நடைபெற்று வருகிறது.
234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் வேட்பாளர் தேர்வு
அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை தேர்வு செய்ய நேர்காணல் இன்று நடைபெறுகிறது. வேட்பாளர்களை தேர்வு செய்வதற்காக குழு அமைக்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிமன்றக் குழுவில் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ், இணை ஒருங்கிணைப்பாளர் ஈ.பி.எஸ், அவைத் தலைவர் மதுசூதனன், துணை ஒருங்கிணைப்பாளர் கே.பி. முனுசாமி, துணை ஒருங்கிணைப்பாளர் வைத்திலிங்கம், அனைத்துலக எம்ஜிஆர் மன்ற செயலர் தமிழ்மகன் உசேன், இலக்கிய அணி செயலாளர் பா. வளர்மதி, சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் ஜஸ்டின் ராஜ், மருத்துவ அணி செயலாளர் வேணுகோபால் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். மொத்தம் இன்று 234 தொகுதிகளுக்கும் ஒரே நாளில் நேர்காணலை நடத்தி முடிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
குமரி தொடங்கி திருவள்ளூர் வரை
தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திண்டுக்கல், திருவாரூர், தஞ்சாவூர், சேலம், கோவை, திருப்பூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு முதலாவது நேர்காணல் நடத்தப்படுகிறது. திருச்சி, கரூர், அரியலூர், பெரம்பலூர், வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை ஆகிய மாவட்டங்களுக்கு நேர்காணல் நடத்தப்படுகிறது. இதேபோல் புதுச்சேரி, கேரள மாநில சட்டசபைத் தேர்தல்களில் போட்டியிட விரும்பி மனு தாக்கல் செய்தவர்களுக்கான இன்று நேர்காணலும் நடைபெற உள்ளது.
விரைவில் வேட்பாளர் பட்டியல்
மார்ச் 12ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்குகிறது. அதற்கு முன்பாகவே கூட்டணி கட்சிகளிடம் தொகுதிப்பங்கீடு குறித்து பேசி முடிவு செய்யப்பட வேண்டும். தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டால் அதிமுகவில் போட்டியிடும் வேட்பாளர்களை இந்த வார இறுதிக்குள் அல்லது மார்ச் 11ஆம் தேதி மகா சிவராத்திரி நாளில் அறிவிக்க வாய்ப்பு உள்ளது என்றும் அதிமுக வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.