கந்தனுக்கு அரோகரா சொன்ன ரஜினி... கட்சி ஆரம்பித்த உடன் அதிமுக உடன் கூட்டணி சேருவாரா
சென்னை: ரஜினி அரசியல் கட்சி எப்போது ஆரம்பிப்பார் என்பதே தெரியாத நிலையில்தான் ரஜினியோடு அதிமுக தேர்தல் கூட்டணி சேருமா? என்ற கேள்வி பலமுறை முன்வைக்கப்படுகிறது. கந்த சஷ்டி கவசம் பிரச்சினையில் இப்போது ரஜினி போட்ட ட்வீட்டிற்கு அமைச்சர்கள் நன்றி கூறியிருக்கிறார். இந்த சம்பவத்தினால் ரஜினியுடன் அதிமுக நெருங்குகிறதோ என்ற எதிர்பார்ப்பும் எழுகிறது. ரஜினி உடனான கூட்டணி பற்றி கேள்வி எழுப்பும் போதெல்லாம் கிண்டலாக பதில் கூறும் ஜெயக்குமார் இப்போது கூட்டணி பற்றி தலைமை முடிவு செய்யும் என்று தெரிவித்திருக்கிறார்.
சைலண்ட் ஆக இருந்த ரஜினி திடீரென்று ஆடி அமாவாசை நாளில் ஒரு போட்டோவை போட்டு ட்ரெண்ட் ஆக்கினார். கேளம்பாக்கத்தில் போய் ஓய்வெடுக்கப் போனதாக சொன்னாலும் அங்கே கட்சி தொடங்குவது போல ஆலோசனையும் நடந்திருக்கிறதாம்.
நவம்பர் மாதத்தில் ரஜினிகாந்த் கட்சி தொடங்குவார் என்று கூறினார் கராத்தே தியாகராஜன். அது பற்றி யாருமே பரபரப்பாக பேசவில்லை. ரஜினியின் மாஸ்க் கார் டிரைவ் போட்டோ வெளியான பின்னர்தான் சமூக வலைத்தளங்கள் பரபரப்பானது.
ரஜினி இ-பாஸ் விவகாரம் - ஒன்றரை லட்சம் ஆவணங்களை ஆய்வு செய்யும் சென்னை மாநகராட்சி
ரஜினிதான் ட்ரெண்ட்
இந்த வாரத்தின் முதல்நாளில் இருந்தே ரஜினி ட்ரெண்ட் ஆனார், போட்டோ போட்டதோடு மட்டுமல்லாது கந்த சஷ்டி கவசம் சர்ச்சை பற்றியும் பேசி கந்தனுக்கு அரோகரா என்று ட்வீட் போட்டார். ரஜினியின் ட்வீட்டிற்கு அமைச்சர்கள் எதிர்வினையாற்றினார்கள். முதலில் நன்றி சொன்னவர் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி. அமைச்சர் ஜெயக்குமாரும் ரஜினிக்கு நன்றி சொன்னதோடு கட்சி தொடங்குவதற்கு வாழ்த்துக்களையும் சொல்லியிருக்கிறார்.
ரஜினி கட்சி உறுதி
ரஜினிகாந்த் கட்சி தொடங்குவாரா மாட்டரா என்ற கேள்விகள் பலமுறை எழுந்தாலும் இந்த ஆண்டு கட்சி ஆரம்பிப்பது உறுதிதானாம். கேளம்பாக்கத்தில் ஜோதிடர்களிடம் ஆலோசனை நடத்தியதில் ஐப்பசி அமாவாசை முடிந்து கந்த சஷ்டி நாளில் கட்சி ஆரம்பிக்கலாம் என்று நாள் குறித்துக்கொடுத்திருக்கிறார்களாம் ஜோதிடர்கள்.
கந்தனுக்கு அரோகரா
கந்த சஷ்டி நாளில் சூரனை சம்ஹாரம் செய்வார் முருகப்பெருமான். அந்த நாளில் கட்சி ஆரம்பித்தால் நிச்சயம் வெற்றிதான் என்று கூறியிருக்கிறார்களாம் ஜோதிடர்கள். நவம்பர் 20ஆம் தேதி கந்த சஷ்டி நாளில் கட்சி ஆரம்பிக்க முடிவு செய்துதான் முதலில் கந்த சஷ்டி கவசத்திற்கு ஆதரவாக ட்வீட் போட்டு கந்தனுக்கு அரோகரா என்று முழக்கம் போட்டு அதை உலகம் முழுக்க ட்ரெண்ட் ஆக்கியிருக்கிறார்.
அதிமுக உடன் கூட்டணி
ரஜினி கட்சி ஆரம்பித்த உடனேயே தனித்து போட்டியிட்டால் சில சதவிகித ஓட்டுக்கள் மட்டுமே கிடைக்கும். ஓட்டுக்களை மட்டுமே பிரிப்பதற்கான தான் ஆரம்பிக்க வேண்டுமா என்று ரஜினி கேட்டிருக்கிறார். ரஜினி கட்சி ஆரம்பித்து வரும் சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டாலும் கண்டிப்பாக பெரிய கட்சிகளுடன் கூட்டணி அமைத்துதான் போட்டியிடுவார் என்கின்றனர் அவரது ஆதரவாளர்கள்.
தேர்தல் கூட்டணி
அதற்கு முன்னோட்டமாகவே ஆளும் கட்சியான அதிமுகவும் ரஜினியும் நெருக்கமாவதாகவே பேசிக்கொள்கிறார்கள். அரசியலில் நிரந்தர நண்பனும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை. சட்டசபைத் தேர்தல் நேரத்தில் எந்த கட்சி எந்த கூட்டணியில் சேரும், புது கட்சிகள் உருவாகி புதிய கூட்டணி அமையுமா பார்க்கலாம்.