ஜெ. அமல்படுத்திய பார்முலா.. தூக்கி போட்டு பாஜகவிடம் பணியுமா அதிமுக.. பதைபதைப்பில் தொண்டர்கள்!
சென்னை: சட்டசபை தேர்தல்களில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு விவகாரத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பார்முலாவை அதிமுக கெட்டியாக பிடித்துக் கொள்ளுமா? அல்லது பாஜகவின் நெருக்கடிக்கு இணங்கி கேட்கிற தொகுதிகளை எல்லாம் தாரை வார்க்குமா? இதை அதிமுக தொண்டர்கள் ஏற்பார்களா? என்கிற கேள்வி எழுந்துள்ளது.
தமிழக சட்டசபை தேர்தல்களில் அதிமுகவும் திமுகவும் தங்களுக்கு போக எஞ்சியவற்றைதான் கூட்டணி கட்சிகளுக்கு பிரித்து கொடுப்பதை கடைபிடித்திருக்கின்றன. இதில் மறைந்த முன்னாள் முதல்வர்கள் கருணாநிதியும் ஜெயலலிதாவும் திட்டவட்டமாக இருந்தனர்.
1991-ல் அதிமுக 168 இடங்களில் போட்டியிட்டது. அப்போது பெரிய அளவுக்கு கட்சிகள் இல்லாத நிலையில் காங்கிரஸ் கட்சிக்கு 65 தொகுதிகளை ஒதுக்கினார் ஜெயலலிதா. ராஜீவ் காந்தி படுகொலை சம்பவம் நிகழ்ந்த அந்தே தேர்தலில் அதிமுக அமோக வெற்றியை அறுவடை செய்தது.
காங்.-க்கு 64 தொகுதிகள்
1996-ல் அதிமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க எதிர்ப்பு கிளம்பி மூப்பனார், தமிழ் மாநில காங்கிரஸ் க்ட்சியை தொடங்கினார். அப்போதும் மீண்டும் 64 தொகுதிகளை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கி கொடுத்தார் ஜெயலலிதா. அப்போது தமிழகத்தில் மதிமுக தலைமையில் 3-வது அணி, பாமக தலைமையில் 4-வது அணியும் களத்தில் இருந்தன. ஆனால் ஜெயலலிதா எதிர்ப்பு அலையில் அதிமுக தோற்றது.
2001 அதிமுக ஒதுக்கீடு
2001 சட்டசபை தேர்தலில் காட்சிகள் அடியோடு மாறின. அதிமுக அணியில் காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ் இரு கட்சிகளுமே இடம்பெற்றன. திமுகவோ பாஜக உள்ளிட்ட 14 கட்சிகளுடன் கூட்டணி அமைத்தது. இந்த தேர்தலில் அதிமுக 140 இடங்களில் மட்டும் போட்டியிட்டது. அதிமுக மிக குறைவான தொகுதிகளில் போட்டியிட்ட முதலும் கடைசி தேர்தலும் இதுதான். அப்போது தமாகாவுக்கு 32; காங்கிரஸுக்கு 14; பாமகவுக்கு 20; இடதுசாரிகளுக்கு 13 இடங்களை ஒதுக்கினார் ஜெயலலிதா.
4 இடங்களில் வென்ற பாஜக
திமுக கூட்டணியில் இருந்த பாஜக 4 இடங்களை வென்றது. அதுவே பாஜகவின் கடைசி வெற்றி. அதிமுக 140 இடங்களில் போட்டியிட்டாலும் 132 இடங்களில் வென்றது குறிப்பிடத்தக்கது.
35 தொகுதிகளில் போட்டியிட்ட மதிமுக
2006 தேர்தலில் அதிமுக 182 இடங்களில் போட்டியிட்டது. அப்போது அதிமுக கூட்டணியில் இருந்த மதிமுகவுக்கு 35 தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கி கொடுத்தார். 2011 தேர்தலில் அதிமுகவுடன் தேமுதிக கூட்டணி வைத்தது. அப்போது தேமுதிகவுக்கு 41 இடங்களை கொடுத்தார் ஜெயலலிதார். அதிமுக 160 இடங்களில் போட்டியிட்டது. 2016 தேர்தலில் பெரிய கட்சிகள் அதிமுக கூட்டணியில் இடம்பெறவில்லை. திமுக, அதிமுகவுக்கு மாற்றாக மக்கள்நலக் கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த தேர்தலில் 227 தொகுதிகளில் போட்டியிட்டது அதிமுக.
ஜெ.வின் பார்முலா
1991-ம் ஆண்டு முதல் 2011 வரையிலான சட்டசபை தேர்தல்களில் அதிமுக குறைந்தபட்சம் 140 இடங்களிலும் அதிகபட்சம் 227 தொகுதிகளிலும் போட்டியிட்டிருக்கிறது. காங்கிரஸ், தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக என அந்த கால கட்டங்களில் வாக்கு வங்கியை வைத்திருந்த காரணத்தால் கணிசமான தொகுதிகளை ஜெயலலிதா ஒதுக்கிக் கொடுத்தார்.
பாஜக வாக்கு சதவீதம்
2014 லோக்சபா தேர்தலில் 3-வது அணியில் போட்டியிட்ட பாஜக 5.56% வாக்குகளைப் பெற்றிருந்தது. 2016 சட்டசபை தேர்தலில் பாஜகவின் வாக்கு சதவீதம் 2.86% மட்டும்தான். அந்த தேர்தலில் 234 தொகுதிகளிலும் இந்திய ஜனநாயக கட்சியுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டது பாஜக. 2019 லோக்சபா தேர்தலில் அதிமுக கூட்டணியில் இடம்பெற்ற பாஜகவுக்கு 3.66% வாக்குகள்தான் கிடைத்து. இதுதான் தமிழக பாஜகவின் நிலைமை. தமிழகத்தில் பாஜகவுக்கு வழக்கத்துக்கு மாறான பேரெதிர்ப்பு அலையும் வீசிக் கொண்டிருக்கிறது. இதை அதிமுக உணர்ந்துதான் அந்த கட்சியை கண்டும் காணாமல் கூட்டணியில் வைத்தும் இருக்கிறது.
அதிமுக என்ன செய்ய போகிறது?
அதிகபட்சம் 5% வாக்குகளைக் கொண்ட கட்சியாக பாஜகவை வைத்துக் கொண்டாலும் மத்தியில் ஆட்சி செய்கிறார்களே என நெருக்கடிக்குள்ளாகி அந்த கட்சி கேட்கும் 60 இடங்கள், 40 இடங்களை அதிமுக கொடுக்க முனைந்தால் பாமக, தேமுதிகவுக்கும் கணிசமான தொகுதிகளை தர வேண்டிய கட்டாயம் ஏற்படும். ஜெயலலிதா இதுவரை கடைபிடித்த கூட்டணி பார்முலாவை கை கழுவிவிட்டு 118 இடங்கள் அல்லது 117 இடங்களில் அதிமுக போட்டியிட தயாராக இருக்கிறதா? என்பது ஒரு கேள்வி. அப்படி போட்டியிட்டு கணிசமான இடங்களில் வென்றாலும் பாஜக, பாமக, தேமுதிக தயவில்தான் அதிமுக ஆட்சி அமைத்தாக வேண்டும் என்கிற புதிய நிலைமை உருவாகும். இன்னொன்று இப்படியான ஒரு முடிவு தற்கொலை முடிவுதான் என்பதை தெரிந்தே வேறவழியே இல்லை என அதிமுக முடிவு எடுக்கப் போகிறதா? அல்லது அதிமுக தொண்டர்கள் இப்படியான ஒரு அப்பட்டமான தற்கொலை முடிவை ஏற்றுக் கொள்ளத்தான் போகிறார்களா? என்கிற கேள்விகளும் வரிசைகட்டி வருகின்றன.