சி.ஏ.ஏ.வுக்கு எதிரான தீர்மானம்... அருமையான பந்து.. கோல் அடிக்காமல் கோட்டைவிடும் எடப்பாடியார்!
Recommended Video
சென்னை: மத்திய அரசின் குடியுரிமை சட்ட திருத்தத்துக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி இஸ்லாமியர்களின் ஏகோபித்த ஆதரவைப் பெறுகிற அருமையான வாய்ப்பை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நழுவவிட்டு வருகிறார் என்கின்றனர் அரசியல் பார்வையாளர்கள்.
தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டுதான் நடைபெறும் என்றாலும் அதற்கான கோதாவில் அரசியல் கட்சிகள் குதிக்க தொடங்கிவிட்டன. இப்போதே கூட்டணிகள் எப்படியெல்லாம் அமையும்? ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்குமா? என்ற கேள்விகளுடன் கட்சிகள் காய்களை நகர்த்தி வருகின்றன.
ஆளும் அதிமுக அரசும், இதுவரை எப்படியோ, இனி மக்களிடம் பெயர் எடுக்க வேண்டும் என்பதற்கான வேலைகளில் முனைப்புகாட்டத் தொடங்கிவிட்டது. இதன் முதல் கட்டமாக காவிரி டெல்டாவை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து அதிரடி காட்டியதுதான். அதிமுக அரசின் இந்த அதிரடியை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அதிமுகவின் இந்த தடாலடியால் மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்புக்கு வேட்டு வைக்க எதிர்க்கட்சிகள் வைக்கும் வியாக்கியானங்கள் செல்லாதவையாகி வருகின்றன. இந்த நிலையில் சிறுபான்மை இஸ்லாமியர்கள் சி.ஏ.ஏ.வுக்கு எதிரான போராட்டம் அதிமுக அரசுக்கு பெரும் சிக்கலாக மாறி இருக்கிறது. அதுவும் சென்னை வண்ணாரப்பேட்டையில் போராடிய இஸ்லாமியர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தியது தேன்கூட்டில் கல்லெறிந்த கதையாகிவிட்டது. தமிழகம் முழுவதும் தமிழக அரசுக்கு எதிரான போராட்டங்கள் விடிய விடிய நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களின் ஒற்றை நோக்கமே தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதுதான்.
வண்ணாரபேட்டை சம்பவம்.. வதந்தி பரப்பி வன்முறையை தூண்டினர்.. பின்னணியில் விஷமிகள்.. முதல்வர் விளக்கம்
இதனைத்தான் இன்று சட்டசபையில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளும் வலியுறுத்தின. ஆனால் சபாநாயகர் தனபால் இதனை நிராகரிப்பதாக கூறியிருக்கிறார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி அமைத்ததால் சிறுபான்மை மக்கள் அதிமுகவுக்கு எதிராக இருக்கின்றனர். இதனை உணர்ந்துதான் அதிமுகவும் பாஜகவிடம் இருந்து விலகியே இருக்கிறது. இந்த நிலையில் தமிழக சட்டசபையில் சிஏஏவுக்கு எதிரான ஒரு தீர்மானத்தை தமிழக அரசு இஸ்லாமியர்களின் கோரிக்கையை ஏற்று நிறைவேற்றி இருந்தால் களநிலவரமே வேறாகவும் மாறி இருக்கும். திமுகவை நோக்கி போலரைஸ் ஆகி இருக்கும் இஸ்லாமியர் வாக்குகளில் சரிபாதியையாவது தங்கள் பக்கம் அதிமுக திருப்ப கிடைத்த அருமையான வாய்ப்பு இது. இதை எதற்காகவோ முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு கோட்டை விட்டுக் கொண்டிருக்கிறது.
பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம், சிஏஏ எதிர்ப்பு தீர்மானம், என்பிஆர் எதிர்ப்பு என அடுத்தடுத்து அதகளமாடி எதிர்க்கட்சிகளை அலறவிட கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவவிட்டுவிட்டதே அதிமுக என்பது அரசியல் பார்வையாளர்களின் ஆதங்கம்.