போனை காட்டவா? எத்தனை தலைவர்கள் கூட்டணிக்கு ரெடி தெரியுமா? .. சுதீஷ் இப்படியே பேசுனா ரொம்பக் கஷடம்!
சென்னை: திராவிடர் இயக்கம், திமுக பேச்சாலேயே கட்சியை வளர்த்தார்கள் என்பது வரலாறு... ஆனால் பேச்சாலேயே தேமுதிக எனும் கட்சியை அழித்தார்கள் என்கிற வரலாற்றுக்கு சொந்தக்காரர்களாகி வருகின்றனர் விஜயகாந்த் குடும்பத்தினர்.
தேமுதிக தங்களது கூட்டணிக்கு வரவேண்டும் என்று பாலும் பழமுமாக தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் காத்திருந்த காலம் உண்டு. திமுகவையே பிரதான எதிர்க்கட்சியாக வரவிடாமல் தடுத்த சரித்திரமும் தேமுதிகவுக்கு உண்டு.
ஆனால் தேமுதிகவில் விஜயகாந்த் உடல்நிலை பாதிக்கப்பட்டு குடும்பத்தில் நண்டு சிண்டு எல்லாம் தலைவர்களாக தலை எடுக்க தொடங்கியதால் சீண்டுவார் இல்லாமல் தேமுதிக முச்சந்திக்கு வந்துவிட்டது. தேமுதிகவுக்கு ஒரு காலத்தில் 10% வாக்குகள் கூட கிடைத்தன.
திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் தொடருதா? 3வது அணிக்கு போவீர்களா? திருமாவளவன் பொளேர் பதில்
விருப்பமனு தர ஆள் இல்லை
இப்போது களநிலவரம் வேற மாதிரி இருக்கிறது.. தேமுதிகவின் 2-ம் கட்ட தலைவர்கள், மாஜி எம்.எல்.ஏக்கள் யாருமே அங்கே இல்லை. விருப்ப மனு கொடுக்கக் கூட ஆளில்லாமல் வெறிச்சோடிக் கிடக்கிற ஒரே அரசியல் கட்சி தலைமை அலுவலகம் சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக ஆபீஸ்தான்.
கவுரவம் தரும் அதிமுக
அதிமுக கூட்டணியில் சிங்கிள் டிஜிட்டில் கொடுக்காமல் 15 தொகுதிகள், ஒரு ராஜ்யசபா சீட் என கவுரவமாக நடத்துகின்றனர். ஆனால் மிதமிஞ்சிய கற்பனை உலகில் சஞ்சாரம் செய்து கொண்டிருக்கும் விஜயகாந்த் குடும்பத்தினர் உதார்விட்டு பேசி வருகின்றனர். இந்த உதார் பேச்சுகள்தான் அந்த கட்சியையே உருக்குலைத்து போட்டிருக்கிறது என்பதை இன்னமும் புரியாமல் இருக்கிறார்கள் அவர்கள்.
திருவண்ணாமலை பேச்சு
திருவண்ணாமலையில் நேற்று பேசிய விஜயகாந்த் மச்சான் சுதீஷ், அதிமுகதான் கூட்டணிக்கு கெஞ்சுகிறது; ராஜ்யசபா சீட் எல்லாம் வேண்டாம். எங்களால் தனித்து போட்டியிட்டு வெல்ல முடியும். விஜயகாந்த் ஆட்சி அமைப்பார். விஜயகாந்த் ஆட்சியில் வன்னியர்களுக்கு மட்டுமல்ல அனைத்து ஜாதியினருக்கும் சமமான இடஒதுக்கீடு கிடைக்கு என அடித்துவிட்டிருக்கிறார்.
கூட்டணிக்கு ரெடியாக எத்தனை பேர் தெரியுமா?
இதன் உச்சகட்டமாக, காரில் என் போன் இருக்கிறது.. எடுத்து காட்டவா? எத்தனை தலைவர்கள் கூட்டணிக்கு தயாராக இருக்காங்க தெரியுமா? என அதிமுகவை மிரட்டி பணியவைக்கும் வகையில் பேசி இருக்கிறார். லோக்சபா தேர்தலிலும் இதேபோல் பேசியே நடுத்தெருவுக்கு போனது தேமுதிக. அப்போது பரிதாப்பட்டு அதிமுகதான் 4 சீட் கொடுத்தது தேமுதிகவுக்கு. இப்போதும் அதே பாணி எனில் அதிமுகதான் என்ன செய்யும்? கழற்றிவிடத்தான் பார்க்கும் என்பதே யதார்த்தம்.