EXCLUSIVE: உதயநிதி போல் உருவாக்கப்பட்டவர் அல்ல! தானே உருவானவர் எடப்பாடி! அடித்துச் சொல்லும் பரமசிவம்
சென்னை : அதிமுகவில் ஒற்றை தலைமையாய் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கம் கிடையாது எனவும் இது முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பம் எனக் கூறியுள்ள அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் விபிபி பரமசிவம், எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவினை வேண்டுமானாலும் எடுப்பார் ஆனால் அந்த முடிவினை சரியான முறையில் நிறைவேற்றுவார் என கூறியுள்ளார்.
அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரம் நாளுக்கு நாள் தீவிரமாகி வரும் நிலையில், ஒற்றைத் தலைமை வேண்டும் என்பதில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரும், இரட்டைத் தலைமை தான் தொடர வேண்டும் என்பதில் ஒ.பன்னீர்செல்வம் தரப்பும் உறுதியுடன் உள்ளனர்.
இந்நிலையில் ஒற்றைத் தலைமையா? இரட்டை தலைமையா? என்பது குறித்து பொதுக்குழுவே முடிவு செய்யும் என்றே நிர்வாகிகள் கூறினர். முதல் பொதுக்குழு பிரச்சினை ஆன நிலையில், அடுத்த பொதுக்குழுவிலும் பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு எடப்பாடி பழனிசாமிக்கே இருப்பதால் தற்போதைய சூழலில் அவர் பக்கமே காற்று வீசுகிறது.
அதிமுக பொதுக்குழு..எடப்பாடி பழனிச்சாமி, ஓ.பன்னீர் செல்வம் பதில்தர சென்னை நீதிமன்றம் உத்தரவு
ஒற்றை தலைமை விவகாரம்
இந்நிலையில் திமுகவில் ஒற்றை தலைமையாய் வர வேண்டும் என்பது எடப்பாடி பழனிச்சாமியின் நோக்கம் கிடையாது எனவும் இது முழுக்க முழுக்க தொண்டர்களின் விருப்பம் எனக் கூறியுள்ள அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாநில செயலாளர் விபிபி பரமசிவம், எடப்பாடி பழனிச்சாமி எந்த முடிவினை வேண்டுமானாலும் எடுப்பார். ஆனால் அந்த முடிவினை சரியான முறையில் நிறைவேற்றுவார் என கூறியுள்ளார். ஒன் இந்தியா தமிழுக்காக பிரத்தியேக பேட்டியளித்த அவர், கட்சியில் எடப்பாடி பழனிசாமியின் செல்வாக்கு, கட்சியின் எதிர்காலம், திமுகவின் உதயநிதி என பல்வேறு விவகாரங்கள் குறித்து மனம் திறந்துள்ளார்.
அதிமுக பொதுக்குழு
அதிமுக பொதுக்குழு உள்ளிட்ட பல வேலைகளுக்கு இடையேயும் நமக்காக பேசிய அவர்," ஒற்றைத் தலைமைக்கு ஆதரவா எதிர்ப்பா என்பதனை பார்ப்பதற்கு முன்னதாக எதனால் இது வந்தது என்பதனை பார்க்க வேண்டும், எந்த இடத்திலேயுமே எடப்பாடி பழனிசாமி அவர்கள் ஒற்றத் தலைமை என்பது குறித்து பேசவில்லை. இது முழுக்க முழுக்க தொண்டர்களின் முன்னெடுப்பு. அதிமுகவின் கொள்கைகள் மிக முக்கியமானவை. இரண்டு ஒன்று திமுக எதிர்ப்பு மற்றொன்று மக்கள் பணி. இரட்டை தலைமை பிரச்சனையால் திமுக எதிர்ப்பு என்ற விவகாரத்தில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது அனைவருக்குமே தெரியும்.
விபிபி பரமசிவம் கருத்து
மேலும் சட்டசபை நிகழ்வுகளில் திராவிட முன்னேற்றம் கழகம் குறித்த அண்ணன் ஓபிஎஸ் அவர்களின் செயல்பாடுகளை பார்த்து தொண்டர்களும் மக்களுமே கோபத்தில் உள்ளனர். மறைந்த முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதா கூறும் போது அதிமுக என்பது யாரையும் முன்னிலைப்படுத்தாது. காலத்திற்கு ஏற்ப தலைவர்கள் தாங்களாகவே உருவாவார்கள். அவர்களை தங்களுக்குள் இருந்தே தொண்டர்கள் தேர்ந்தெடுத்துக் கொள்வார்கள் என்று கூறியிருந்தார். அந்த வகையில் எடப்பாடி பழனிச்சாமி சுயம்புவாக உருவாகி தற்போது ஒற்றை தலைமை அளவுக்கு உயர்ந்திருக்கிறார். ஒரு சாதாரண கிளை செயலாளராக இருந்து பின்னர் சட்டமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற உறுப்பினர், அமைச்சர், முதலமைச்சர் என உழைப்பின் மூலம் உயர்ந்த மனிதரான எடப்பாடி பழனிச்சாமியை தற்போது தொண்டர்களை தங்கள் தலைமையாய் வர வேண்டும் என எதிர்பார்க்கின்றனர்.
எடப்பாடி பழனிசாமிக்கே ஆதரவு
தற்போதைய சூழ்நிலையில் மாவட்ட செயலாளர்கள் பொதுக்குழு உறுப்பினர்கள் மட்டுமல்லாது தொண்டர்களும் அவர் பக்கம் தான் உள்ளனர். ஓ பன்னீர்செல்வம் அவர்கள் கூறுவது போல பொதுச் செயலாளரை தேர்ந்தெடுக்க தேர்தல் வைக்க வேண்டும் என கூறினாலும், அதிலும் எடப்பாடி பழனிச்சாமி தான் நிச்சயம் வெற்றி பெறுவார். அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. இது ஒரு வகையில் அவருக்கு ஆதரவானது என்பதுதான் எனது கருத்து.
Recommended Video
ஓ.பன்னீர் செல்வம்
இன்னொரு விஷயத்தையும் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். ஏற்கனவே கூறியது போல எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தானாக முன்வந்து ஒற்றைத் தலைமையாய் பதவி ஏற்க வேண்டும் என கூறவில்லை தொண்டர்கள் கருத்துக்களை பிரதிபலிக்கும் வகையிலேயே மூத்த நிர்வாகிகள் ஒற்றை தலைமையாய் அவர் வரவேண்டும் என விரும்புகின்றனர். மேலும் அதிமுகவில் யார் வேண்டுமானாலும் தலைமைக்கு வரலாம் என்பதற்கு இது ஒரு சிறந்த உதாரணம். கட்சி எடுத்த முடிவுகளை எதிர்ந்த்து நீதிமன்றம், காவல் நிலையம் என செல்வது எந்த விதத்தில் நியாயம்.
உதயநிதி ஸ்டாலின்
திமுகவில் உதயநிதி ஸ்டாலின் தன்னை மூன்றாம் கலைஞர் என அழைக்க வேண்டாம் எனக் கூறுகிறார். ஆனால் சின்னவர் என அழைக்க வேண்டும் என கூறுகிறார். உண்மையிலேயே அவர் தன்னை உதயநிதி என்றே அழையுங்கள் என கூறி இருந்தால் அதுதான் உண்மையான சுயமரியாதை . ஆனால் சின்னவர் என்பது ஒரு பட்டப் பெயர் தான். உதயநிதி ஸ்டாலினை திமுகவினர் உருவாக்கி வருகின்றனர். உதயநிதி போல உருவாக்கப்பட்டவர் அல்ல எடப்பாடி பழனிச்சாமி. கழகத்தின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து தானே உருவாகி தலைவராக வந்துள்ளவர் எடப்பாடி பழனிச்சாமி.