இந்த 2 விஷயங்களில் திமுக அரசின் நல்ல முடிவுகளுக்கு.. அதிமுக உறுதுணையாக இருக்கும்.. செங்கோட்டையன்
சென்னை: இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும். சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு உறுதுணையாக இருப்போம் என அதிமுக சட்டமன்ற உறுப்பினர் செங்கோட்டையன் இன்று சட்டமன்றத்தில் தெரிவித்தார்.
சட்டசபையில் தினமும் துறைவாரியாக மானிய கோரிக்கை மீதான விவாதம் நடந்து வருகிறது. பள்ளிக்கல்வித்துறை மீதான மானியக்கோரிக்கை விவாதம் இன்று நடந்தது.
சென்னை அருகே ரூ.7 கோடி மதிப்புள்ள போதை மாத்திரைகள் பிடிபட்டது
இதில் கலந்து கொண்டு முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சரும், அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான செங்கோட்டையன் பேசியதாவது :

தொழிற்படிப்பு
இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவு அடித்தட்டு மக்களின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

மாறி மாறி ஆட்சி
1967 ஆம் ஆண்டுக்கு பிறகு திராவிட இயக்கங்கள் தான் தமிழ்நாட்டை ஆளும் என்பதற்கு அடித்தளமிட்டவர் தந்தை பெரியார். திராவிட கட்சிகள் மாறி மாறி ஆட்சிக்கு வருமே தவிர திராவிட மண்ணை யாராலும் வீழ்த்த முடியாது என்றார்.

செங்கோட்டையன் பேச்சு
மாணவர்கள் இடைநிற்றல் 0.75 சதவிகிதமாக இருக்கிறது. அதுவும் இருக்கக் கூடாது என்பது தான் அதிமுகவின் கொள்கை என்று பேசிய செங்கோட்டையன், அதிமுக ஆட்சி காலத்தில் தொடங்கப்பட்ட கல்வி தொலைக்காட்சி மற்றும் யாழ்பாணத்திற்கு ஒரு லட்சம் நூல்கள் வழங்கியது, இங்கிலாந்து, மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளுக்கு நூல்களை அனுப்பி வைத்து போன்றவற்றை சட்டசபையில் பேசினார்.

உறுதுணை
இரு மொழிக் கொள்கையாக இருந்தாலும் சரி நீட் தேர்வாக இருந்தாலும் சரி தமிழக அரசு எடுக்கும் நல்ல முடிவுக்கு அதிமுக உறுதுணையாக இருக்கும் என்று முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் சட்டசபையில் இன்று உறுதியளித்தார்.

ஸ்டாலின் தாக்கல்
அரசு பள்ளி மாணவர்கள் தொழிற்படிப்புகளில் சேர்வதற்கான 7.5 சதவீதம் இடஒதுக்கீட்டிற்கான சட்டமுன்வடிவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழக சட்டப் பேரவையில் தாக்கல் செய்தார் . ஓய்வுபெற்ற நீதியரசர் திரு. த. முருகேசன் தலைமையிலான ஆணையம் பரிந்துரைத்தபடி, மருத்துவம் போன்றே, பிற இளநிலைத் தொழிற்கல்விப் படிப்புகளுக்கான சேர்க்கையிலும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% முன்னுரிமையின் அடிப்படையில் ஒதுக்கீடு வழங்குவதற்கான சட்டமுன்வடிவு இன்று அறிமுகம் செய்யப்பட்டது. ஒருமித்த குரலுடன் அனைத்து உறுப்பினர்களும் மசோதாவை ஆதரித்ததால் நிறைவேறியது.