உட்கட்சி பூசல் சரியாய்ருமா.. குழப்பமா இருக்கே.. பேசியவர்களை விட்டுவிட்டு மீடியா மீது பாயும் அதிமுக
பேட்டியளிக்ககூடாது என்று அதிமுக நிர்வாகிகளுக்கு உத்தரவு போட்டுள்ளது
சென்னை: அதிமுக தலைமைதான் குழம்பி உள்ளதா, அல்லது நம்மைதான் போட்டு குழப்புகிறதா என்று தெரியவில்லை.
ஜெயலலிதா ஒரு உத்தரவு பிறப்பித்தால், அதை உயிராக மதித்து நடந்தனர் நிர்வாகிகள். அமைச்சர்களும் கப்சிப்தான்.. அவர் முன்னாடி கைகட்டி நின்று கடைசிவரை அமைதி.. அமைதி என்பதைதான் கடைபிடித்தார்கள்.
அந்த அளவுக்கு அவர் மீது பயமும், மரியாதையும் கலந்தும் இருந்தது. கட்சியும் ஒரு கட்டுக்கோப்புக்குள் குலைந்துவிடாமல் இருந்தது. இப்போது எல்லாமே தலைகீழ்:
ராஜன் செல்லப்பா
ராஜன் செல்லப்பா பேட்டி தந்தபோதே, நிர்வாகிகள் இதை பற்றி கருத்து சொல்ல கூடாது என்று தலைமை உத்தரவிட்டது. இதை யாராவது மதித்தார்களா? திருப்பரங்குன்றம் ஆலோசனை கூட்டம் பற்றி யாராவது கவலைப்பட்டார்களா?
கருத்து
இதற்குபிறகு நேற்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஏதோ கூட்டம் முடிந்தவுடன் முக்கியமான அறிவிப்பு, கருத்து சொல்வார்கள் என்று எதிர்பார்த்தால், இதற்கு மாறாக யாரையும் கருத்தே சொல்ல கூடாது என்று மற்றொரு உத்தரவு போடப்பட்டது. இதையாவது யாராவது மதித்தார்களா? கூட்டம் முடிந்த அடுத்த செகண்டே வெளியில் வந்து எதை பேசக்கூடாது என்றார்களோ, அதை பற்றிதான் முக்கிய அமைச்சர், நிர்வாகிகள் பேசி விட்டு போனார்கள்.
இடிக்கிறது
இன்னைக்கு இன்னொரு அறிவிப்பு வெளியாகி உள்ளது. ஊடகங்கள் கட்சி அங்கீகரிக்காத நிர்வாகிகளிடம் கருத்து கேட்கக் கூடாது. மீறினால் ஊடகங்கள் மீது சட்ட நடவடிக்கை பாயும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதான் இடிக்கிறது.
சிவி சண்முகம்
ஏற்கனவே உத்தரவை மீறிய ராஜன் செல்லப்பா மீது இதுவரை என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று தெரியவில்லை. ராஜன் செல்லப்பா என்றில்லை, அமைச்சர் சிவி சண்முகம் எத்தனையோ முறை பல விஷயங்களில், அதுவும் ஜெயலலிதா ஆஸ்பத்திரி விவகாரம் வரை வெளிப்படையாக கருத்து சொன்னார். அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எதுவும் பாயவில்லையே ஏன்?
செல்லூர் ராஜூ
அவ்வளவு எதற்கு? தமிழக அமைச்சர்களில் ஒரு சிலர் இன்றும் சசிகலா ஆதரவாளர்களாகேவே இருந்து வருகிறார்கள். அதில் ரொம்ப முக்கியமானவர் செல்லூர் ராஜுதான். கடந்த டிசம்பர் 18-ம் தேதி மதுரையில் இவர் ஒரு பேட்டி அளித்தார். அதில், "ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு தற்போதுள்ள அதிமுக அரசை அமைத்தவர் மாண்புமிகு சின்னம்மாதான்" என்று முடிந்தவரை தன் விசுவாசத்தை காட்டி வருகிறாரே.. அதற்கு இதுவரை கட்சி ஒழுங்கு நடவடிக்கை எடுத்தது என்றும் தெரியவில்லை.
அரசியல் கட்சி
நிர்வாகிகளுக்கு உத்தரவு போட தலைமைக் கழகத்துக்கு உத்தரவு உள்ளது. அதன்படி கருத்து சொல்லகூடாதுதான். ஆனால் மீடியாக்களிடம் பேசக்கூடாது என்பதை எப்படி கண்டிஷனாக போட முடியும்? மீடியா என்பது மக்களுக்கு செய்திகளை வழங்கும் ஒரு ஊடகம். அதிமுக உட்பட எந்த அரசியல் கட்சி சம்பந்தப்பட்ட விஷயங்களையும் மக்களுக்கு சொல்வதுதான் வேலை.
எச்சரிப்பதா?
எனவே கட்டுப்பாட்டை மீறும் கட்சியினர் மீது நடவடிக்கை எடுக்காமல், செய்திகளையே வெளியிடக் கூடாது என்ற ரீதியில் ஊடகங்களை எச்சரிப்பது எப்படி அதிமுகவின் வளர்ச்சிக்குப் பயன்படும் என்று தெரியவில்லை. அதிமுக தலைமை குழப்பத்தில் இருக்கா இல்லை நாமதான் குழம்பிப் போயிருக்கோமா ... ஒன்னுமே தெரியலையே!