நீதிபதி ஏ.கே. மிட்டலை சென்னை ஹைகோர்ட்டுக்கு மாற்ற வேண்டும்.. பார் அசோசியேஷன்
சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்துள்ள நிலையில் மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது தொடர்பான பரிந்துரை மீது தகுந்த உத்தரவை குடியரசு தலைவர் பிறப்பிக்க வேண்டுமென அகில இந்திய பார் அசோசியேசன் கோரிக்கை வைத்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி தஹில் ரமானி ராஜினாமா செய்ததையடுத்து, அவருக்கு ஆதரவாக தமிழக முழுவதும் வழக்கறிஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
இந்நிலையில் உச்ச நீதிமன்ற கொலிஜியம் தஹில்ரமானியை மேகாலயா உயர் நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்த உத்தரவுக்கு அகில இந்திய பார் அசோசியேசன் ஆதரவு தெரிவித்துள்ளது.
சென்னை உயர் நீதிமன்றத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அகில இந்திய பார் அசோசியேசன் தலைவர் ஆதீஷ் அகர்வாலா, சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி பதவி வெற்றியிடமாக இருப்பதால், தஹில்ரமானியின் ராஜினாமா கடிதத்தை குடியரசு தலைவர் ஏற்றுகொள்ள வேண்டும்.
கொலிஜியம் பரிந்துரைத்தபடி மேகாலயா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிப்பது தொடர்பாக குடியரசு தலைவர் விரைந்து உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
அரசியல் சாசனத்தின் படி நீதிபதி தன் பதவியை ராஜினாமா செய்தால் அவர் உடனடியாக பதவியிலிருந்து விலகியதாகவே அர்த்தம். தலைமை நீதிபதி இல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் பணிகள் பாதிக்கப்பட்டிருக்கிறது.
கொலிஜியத்தின் பணிகளில் வெளிப்படைத்தன்மை இல்லை, முறையாக செயல்படவில்லை. தலைமை நீதிபதி தஹில்ரமானியை இடம் மாற்றம் செய்ததை எதித்து போராடிய வழக்கறிஞர்களுக்கு, அவர் கொலிஜியத்திடமிருந்து பல சலுகைகள் பெற்றுள்ளார் என்பது தெரியாது என்று கூறினார்.