ஏன் இன்விடேஷன் தரலை.. மேடையில் வைத்து ஜெயக்குமாருடன் மோதிய அதிமுக மா.செ.
Recommended Video
சென்னை: சென்னையில் நடந்த அரசு விழாவில் மேடையில் வைத்து அமைச்சர் ஜெயக்குமாருடன் அதிமுக பிரமுகர் ஒருவர் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை தண்டையார்பேட்டையில் இந்தியன் ஆயில் நிறுவனத்தின் பெட்ரோல் பங்க் வளாகத்தில் கூட்டுறவு மொத்த பண்டகசாலை விற்பனை மையம் இன்று திறந்து வைக்கப்பட்டது.
நிகழ்ச்சியில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார், வருவாய்த்துறை அமைச்சர் செல்லூர் ராஜு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதிமுக அவைத் தலைவர் மதுசூதனன் உள்ளிட்ட அதிமுக பிரமுகர்களும் பெருமளவில் திரண்டு வந்திருந்தனர். அதிகாரிகள் வந்திருந்தனர்.
இந்த நிலையில் மேடைக்கு வந்த வட சென்னை கிழக்கு மாவட்ட அதிமுக செயலாளர் ஆர். எஸ். ராஜேஷ் என்பவர் திடீரென அமைச்சர் ஜெயக்குமாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். ஏன் எனக்கு முறைப்படி அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று அவர் கோபமாக கேட்டார்.
குருமூர்த்தி Vs 'நமது அம்மா'.. பந்திக்கு வெளியே காத்திருக்கும் அதிமுக.. தூக்கில் தொங்கும் துக்ளக்!
அமைச்சருடன் ராஜேஷ் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் மேடையில் பரபரப்பு ஏற்பட்டது. ராஜேஷின் கேள்விகளுக்கு அசராமல் ஜெயக்குமார் உடனுக்குடன் பதில் கொடுத்தார். அமைச்சர் செல்லூர் ராஜு அமைதியாக இதைப் பார்த்தபடி இருந்தார். பின்னர் ராஜேஷிடம் உட்காருங்க என்று அமைதிப்படுத்தினார்.
ராஜேஷ் படு சூடாக இருந்ததைப் பார்த்த மதுசூதனும் உட்காருப்பா உட்காருப்பா என்று சமாதானப்படுத்தி தனக்கு அருகில் அமர வைத்தார். இந்த சம்பவத்தால் சில நிமிடங்கள் மேடையில் பரபரப்பு நிலவியது.