மதுரை எய்ம்ஸ் எப்போது கட்டப்படும்.. மத்திய அரசு கொடுக்கும் விளக்கத்தை பாருங்க!
தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Recommended Video
சென்னை: தமிழகத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளித்த பிறகு 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
சகல மருத்துவ வசதிகளும் கொண்ட மத்திய அரசின் எய்ம்ஸ் மருத்துவமனை தமிழகத்தில் மதுரையில் அமைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தோப்பூரில் 200 ஏக்கர் நிலப்பரப்பில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய உள்ளது.
இந்தியா முழுக்க புதிதாக மொத்தம் 14 இடங்களில் இந்த எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்பட உள்ளது.
கடைசியில் இடம் தேர்வு
மதுரையில் இந்த இடம் தேர்வு செய்யப்படவே பல நாட்கள் ஆனது. சென்னை, திருச்சி என்று பல இடங்கள் சோதனை செய்யப்பட்டு கடைசியில் மதுரையில் தோப்பூரில் இடம் உறுதி செய்யப்பட்டது. பல தேர்வுகள், அலைக்கழிப்புகளை அடுத்து மதுரையில் உள்ள தோப்பூர் இதற்காக தேர்வு செய்யப்பட்டது.
ஆனால் அனுமதி
ஆனால் மத்திய அமைச்சரவை இதற்கு இன்னும் ஒப்புதல் அளிக்கவில்லை. மதுரை தோப்பூரில் எய்ம்ஸ் அமைய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளிக்கவில்லை என்று தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் தகவல்வெளியானது. மக்கள் விழிப்புணர்வு அறக்கட்டளையை சேர்ந்த ஹக்கிம் இந்த தகவலை பெற்று இருக்கிறார்.
வழக்கு தொடுக்கப்பட்டது
இதையடுத்து மத்திய அரசுக்கு எதிராகவும், சுகாதாரத்துறைக்கு எதிராகவும் இதனால் பொது நல வழக்கு தொடுக்கப்பட்டது. மதுரையை சேர்ந்த கேகே ரமேஷ் என்பவர் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் இது தொடர்பாக பொது நல வழக்கு தொடுத்தார். அவர் தொடுத்த வழக்கில், சில நாட்களுக்கு முன், எய்ம்ஸ் மருத்துவமனை எப்போது மதுரையில் கட்டப்படும் என்று விளக்கம் கேட்டு மத்திய சுகாதாரத்துறைக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது.
என்ன விளக்கம்
தற்போது அதற்கு மத்திய சுகாதாரத்துறை விளக்கம் அளித்துள்ளது. அதில் தமிழகத்தில் சோதனை செய்த எய்ம்ஸ் கட்டுமான குழுவின் ஆய்வறிக்கை மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு இருக்கிறது. இதை பார்த்து, எய்ம்ஸ் மருத்துவமனை அமைய மத்திய அரசு ஒப்புதல் அளிக்க வேண்டும். ஒப்புதல் அளித்த பிறகு எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும். இன்னும் 45 மாதங்களில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.