அங்கிட்டு ஓவைசி கட்சி.. இங்கிட்டு எஸ்டிபிஐ.. முஸ்லிம் வாக்குகளை பறிகொடுக்க போவது அதிமுகவா? திமுகவா?
சென்னை: தமிழக சட்டசபை தேர்தலில் எஸ்டிபிஐ, ஓவைசியின் மஜ்ஸ்லி கட்சி ஆகிய இரண்டும் தனித்தனியே களமிறங்கவே அதிக வாய்ப்புகள் இருப்பதால் இஸ்லாமிய வாக்குகளை பறிகொடுக்க நேரிடுமோ என்ற அச்சத்தில் அதிமுகவும் திமுகவும் உள்ளன.
பீகாரில் ஓவையின் மஜ்லிஸ் கட்சி தொடக்கத்தில் ஆர்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் கூட்டணியில் இணைய பேச்சுவார்த்தை நடத்தியது. ஆனால் ஆர்ஜேடி கூட்டணியில் இருந்து சமிக்ஞை வரவில்லை.
இதனால் தனித்துப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றதுடன் ஆர்ஜேடியின் ஆட்சி கனவுக்கும் வேட்டு வைத்துவிட்டது. இதேநிலைமையைத்தான் தமிழகத்திலும் ஓவைசி கட்சி எதிர்கொண்டிருக்கிறது.
ஓவைசி கட்சி தனித்து போட்டி
அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தலை எதிர்கொள்ளும் தமிழகத்தில், திமுக கூட்டணியில் இடம்பெறுவதற்கு ஓவைசி கட்சி பேச்சுவார்த்தையை தொடங்கியது. 2 மாதங்களாக திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனுடன் பேசிவருகிறோம்.. ஆனால் எந்த பதிலும் வரவில்லை.. அதனால் தனித்து போட்டியிடப் போகிறோம்.. தேர்தலில் திமுக தோற்றால் மஜ்லிஸ் கட்சி பொறுப்பு அல்ல என அந்த கட்சி பகிரங்கமாகவே கூறியுள்ளது.
திமுக கூட்டணி சாத்தியமா?
இதேபோல்தான் மற்றொரு இஸ்லாமிய கட்சியான எஸ்டிபிஐ நிலைப்பாடும் உள்ளது. கடந்த 2016 தேர்தலில் திமுக கூட்டணியில் இடம்பெற எஸ்டிபிஐ கட்சி முயற்சித்தது. ஆனால் அது நிறைவேறவில்லை. இப்போதும் திமுக அணியில் அது இடம்பெறுமா? என்பது தெரியவில்லை.
எஸ்டிபிஐயும் தனித்து போட்டி
அதேநேரத்தில் திமுக கூட்டணியில் முஸ்லிம் கட்சிகள் இருப்பதால் எஸ்டிபிஐ கேட்கும் தொகுதிகள் கிடைக்கவும் வாய்ப்பு குறைவு. இன்னொரு பக்கம் அதிமுக-பாஜக கூட்டணி உறுதியாகி உள்ளது. இந்த கூட்டணியில் எஸ்டிபிஐ இடம்பெறுவதும் வாய்ப்பில்லாத ஒன்று. அதனால் அந்த கட்சி தனித்தே போட்டியிடும் சூழ்நிலை உள்ளது.
முஸ்லிம் கட்சிகள் நம்பிக்கை
இப்படி முஸ்லிம் கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டு வாக்குகளைப் பிரிப்பது தங்களுக்கு எந்த அளவுக்கு பாதகமாக இருக்கும்? என்கிற கணக்குகளிலும் விவாதங்களிலும் மூழ்கியிருக்கின்றன திமுக, அதிமுக. ஆனால் திமுக கூட்டணியில் இருக்கும் முஸ்லிம் கட்சி தலைவர்களோ, தங்களுக்கு என பாரம்பரிய வாக்கு வங்கி உள்ளது. அதை இந்த கட்சிகளால் சிதைக்க முடியாது. பீகார் உள்ளிட்ட பிற மாநில நிலவரம் வேறு. தமிழ்நிலத்துக்கான களம் வேறு எனவும் சுட்டிக்காட்டுகின்றனர்.