பாஜக சங்காத்தமே வேண்டாம்.. செம ஷாக் கொடுத்த சரத்குமார்
- கோயா
சென்னை: பாஜகவுக்கு இது நிச்சயம் ஷாக் செய்திதான். பாஜக கூட்டணியில் இடம் பெர மாட்டோம் என்று அதிரடியாக கூறி அக்கட்சியை அதிர வைத்துள்ளார் சமத்துவ மக்கள் கட்சித் தலைவர் சரத்குமார்.
பாஜக கூட்டணியில் யார் இடம் பெறுவார்கள் என்பது இன்னும் கூட தெளிவாகவில்லை. அதிமுக, பாமக, பாஜக, தேமுதிக, புதிய தமிழகம், இன்னும் சில குட்டியூண்டு கட்சிகள் என்ற அளவுக்குத்தான் பேச்சுக்கள் அடிபடுகின்றன.
இதில் பாஜக அதிமுக இடையே மட்டும்தான் அதிகாரப்பூர்வமாக ஒரு சுற்று பேச்சுவார்த்தை நடந்துள்ளது. அதிமுக தனிப்பட்ட முறையில் என்ஆர் காங்கிரஸுடன் பேச்சு நடத்தியுள்ளது. மற்றபடி யார் யாருடன் பேசிக் கொண்டிருக்கிறார்கள் என்பது கமுக்கமாக உள்ளது. இந்த நிலையில் சென்னையில் சரத்குமார் கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் இன்று நடந்தது. அதன் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த சரத்குமார், பாஜக கூட்டணியில் இடம் பெற மாட்டோம் என்று தடாலடியாக அறிவித்தார்.
இடைத்தேர்தல் வீண்வேலை
மேலும் 21 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்துவது வீண்வேலை என்கிற ரீதியில் இடைத்தேர்தல் வேண்டாம் எனவும் சரத்குமார் வலியுறுத்தினார். பாஜகவை ஒரு புறம் எதிர்க்கும் சரத்குமார், மறுபுறம் அதிமுகவுக்கு சாதகமாக இடைத்தேர்தல் தேவையில்லை எனக்கருத்து தெரிவித்திருப்பது விசித்திரமானது எனக் கூறுகின்றனர் அரசியல் நோக்கர்கள்.
மத்திய அரசின் போக்கு
ச.ம.கவுக்கு வாக்கு வங்கியே தென் மண்டலம் தான். அதிலும் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மாவட்டங்களில் கணிசமான வாக்குகளை கொண்டுள்ள ச.ம.க. அமைப்பு ரீதியாகவும் கொஞ்சம் வலுவாக உள்ளது. இந்நிலையில் ஸ்டெர்லைட் விவகாரத்தில் மத்திய அரசின் போக்கு தூத்துக்குடி மாவட்ட மக்களை கொதிப்படைய வைத்துள்ளது.
பாஜக அணி வேண்டாம்
இதனை உணர்ந்ததாலும், நாடாளுமன்ற தேர்தலை பெரிதாக எடுத்துக் கொள்ளாததாலும் பாஜகவுக்கு நோ சொல்லும் முடிவை தைரியமாக எடுத்தாராம் சரத். மேலும் தென் மாவட்ட நிர்வாகிகளும் பாஜக அணிக்கு வேண்டாம் என வலியுறுத்தியதால், அவர்களை மீறி முடிவெடுத்து முதலுக்கே மோசம் வரக்கூடாது என நினைத்தாராம் சரத்.
லோக்கல் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம்
மேலும் அதிமுகவுக்கு ஒரு 'இக்' வைத்து பேசியிருப்பதற்கு, உள்ளாட்சி தேர்தலே காரணம் எனக் கூறப்படுகிறது. உள்ளாட்சி தேர்தலில் தன்னை நம்பியுள்ள லோக்கல் நிர்வாகிகளுக்கு அங்கீகாரம் பெற்றுத்தரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள சரத் அதிமுகவை வேண்டும் என்றோ, வேண்டாம் என்றோ இதுவரை எதுவும் கூறாததற்கு காரணம் இது தான் எனப்படுகிறது. இருப்பினும் வரும் 28 ம்தேதி தனித்துப்போட்டி அல்லது 3-வது அணிக்கு ஆதரவு என்ற நிலைப்பாட்டை தெரிவிப்பாராம் சரத்.
ச.ம.க.வின் கோட்டை
ச.ம.க.வின் கோட்டை என அந்தக் கட்சிக்காரர்களால் கருதப்படும், தூத்துக்குடியில் கனிமொழி களம் இறங்குவதால், தன்பாடு திண்டாட்டம் ஆகிவிடுமோ என்கிற அச்சமும் நாட்டாமைக்கு ஏற்பட்டுள்ளதாம். இதனிடையே ராதிகாவை போட்டியிட வைக்க சிலர் வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கு துளியும் வாய்ப்பில்லை என ச.ம.க வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.