இது ஜனநாயக நாடு.. நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம்.. துணை முதல்வர் ஓபிஎஸ்ஸும் அழைப்பு!
இந்தியா ஜனநாயக நாடு, அதனால் நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
சென்னை: இந்தியா ஜனநாயக நாடு, அதனால் நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் அதிமுக கட்சியினருக்கு இடையிலான சண்டை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. எடப்பாடி பழனிசாமி முதல்வர் ஆவார் என்று கனவில் கூட நினைத்து இருக்க மாட்டார் என்று நேற்று ரஜினிகாந்த் குறிப்பிட்டு இருந்தார்.
அவரின் இந்த பேச்சுக்கு அதிமுகவினர் கண்டனம் தெரிவித்துள்ளனர். கமல்ஹாசன், விஜய் மற்றும் ரஜினியின் அரசியல் வருகை குறித்து தற்போது அதிமுகவினர் விமர்சனம் செய்து வருகிறார்கள்.
சென்னை பேட்டி
சென்னையில் பேட்டி அளித்த துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம், நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் கமல்ஹாசன் இருவரும் நல்ல நடிகர்கள். அவர்கள் இருவரும் சேர்ந்து நிறைய படங்களில் நடித்து இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் சேர்ந்து அரசியலுக்கு வருவாரா என்று தெரியவில்லை. என்ன நடக்கிறது என்று பார்க்கலாம்.
சந்திக்கட்டும்
அவர்கள் சேர்ந்து அரசியலுக்கு வந்து தேர்தலை சந்திக்கட்டும். அது அவர்களின் தனிப்பட்ட விருப்பம். அப்படி ஏதாவது விஷயம் நடந்தால் நான் அது பற்றி கருத்து கூறுகிறேன். இப்போது அது பற்றி பேச முடியாது.
நிறைய மாற்றம்
அரசியலில் நிறைய மாற்றங்கள் நடக்கும். அரசியலில் எப்போது என்ன நடக்கும் என்று சொல்ல முடியாது. இந்தியா ஜனநாயக நாடு. இந்தியா மதசார்பற்ற நாடு. இங்கு யார் வேண்டுமானாலும் அரசியல் கட்சி தொடங்கலாம்.
அஜித் எப்படி
ஆம், அஜித் அரசியல் கட்சி தொடங்க விரும்பினால் அவரும் கூட தொடங்கலாம். அவருக்கு மக்கள், ரசிகர்கள் ஆதரவு இருக்கிறது. அவர் கட்சி தொடங்க ஆசைப்பட்டால் கண்டிப்பாக தொடங்கலாம் என்று துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.