அஜித்தை வீடியோ எடுத்த பெண் மருத்துவ ஊழியர் பணிநீக்கம்.. மேலாளர் மீது போலீஸில் புகார்
சென்னை: சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு வந்த நடிகர் அஜித்துடன் புகைப்படம் எடுத்து, வீடியோ எடுத்த பெண் பணியிலிருந்து நீக்கப்பட்ட நிலையில் தனக்கு அஜித்திடம் இருந்து உதவி வாங்கி தருவதாக கூறி ஏமாற்றிய மேலாளர் சுரேஷ் சந்திரா மீது அந்த பெண் புகார் அளித்துள்ளார்.
Recommended Video
கடந்த ஆண்டு மே மாதம் மருத்துவமனைக்கு மனைவி ஷாலினியுடன் வந்த அஜித்தை ரசிகை ஒருவர் வீடியோ எடுத்த விவகாரம் தற்போது அந்த பெண் தற்கொலை முயற்சி வரை சென்றுள்ளது.
சென்னை சாலிகிராமம் பகுதியைச் சேர்ந்தவர் 28 வயதானவர் பர்சானா. இவர் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களுக்கான ஒருங்கிணைப்பாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வந்துள்ளார்.
ஆர்வக் கோளாறு
இந்த நிலையில் கடந்த மே மாதம் கொரோனா பரவல் நேரத்தில் அந்த மருத்துவமனைக்கு நடிகர் அஜித் பரிசோதனைக்காக வந்துள்ளார். தீவிர அஜித் ரசிகையான பர்சானா ஆர்வக் கோளாறு காரணமாக அஜித்தை வீடியோ எடுத்துள்ளார்.
செல்போன்
இதை கண்காணித்த பாதுகாப்பு அதிகாரிகள் அவரின் செல்போனை பறித்து வைத்துக் கொண்டதாக தெரிகிறது. மீண்டும் செல்போன் பர்சானாவிடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் எப்படியோ வீடியோ கசிந்து சமூகவலைதளங்களில் வெளியாகியுள்ளது.
பணிநீக்கம்
நடிகர் அஜித்திற்கு கொரோனாவா என்ற கேள்விக்குறியுடன் அந்த வீடியோவை ஒரு சிலர் சமூகவலைதளங்களில் பரப்பினார். இதனால் பர்சானாவை மருத்துவமனை நிர்வாகம் பணியிடைநீக்கம் செய்துள்ளது. அஜித்தின் மனைவி ஷாலினியின் வேண்டுகோளின்படி அந்த பெண்ணுக்கு மருத்துவமனை நிர்வாகம் மீண்டும் வேலையை கொடுத்துவிட்டு மீண்டும் பணிநீக்கம் செய்துவிட்டது.
மருத்துவமனை
இதையடுத்து பர்சானா மருத்துவமனை நிர்வாகத்திடமும் ஷாலினியிடமும் மன்னிப்பு கேட்டார். எனினும் மருத்துவமனை நிர்வாகத்திடம் பர்சானா கடன் வாங்கியதை காரணம் காட்டி சான்றிதழ்களை கொடுக்க மறுத்து இழுத்தடித்து வந்தது. இதனால் கடந்த ஓராண்டாக எந்த பணிக்கு செல்ல முடியாமல் வயதான தாய், தந்தையை கவனிக்க முடியாமல் இருந்துள்ளார்.
தொடர்பு
நடிகர் அஜித்தை தொடர்பு கொண்டு நடந்த விஷயங்களை அவரிடம் சொல்லலலாம் என அவரது மேலாளர் சுரேஷ் சந்திராவை தொடர்பு கொண்டுள்ளார். முதலில் அஜித்திடம் பேசி நிவாரணம் வாங்கி தருவதாக தெரிவித்த சுரேஷ் சந்திரா பிறகு முடியாது என கூறிவிட்டார்.
பர்சானா ஆடியோ
இதையடுத்து சுரேஷ் சந்திராவிடம் பர்சானா பேசும் ஆடியோ வைரலாகியுள்ளது. அதில் அஜித் சார் ஒரு வார்த்தை சொன்னால் எனக்கு வேலை கிடைக்கும் என பர்சானா சொல்ல, சுரேஷ் சந்திராவோ சார் அதெல்லாம் செய்ய மாட்டார். வேலை போனதற்கு வேறு ஏதாவது காரணமாகக் கூட இருக்கலாம், உங்கள் மருத்துவமனை நிர்வாகத்தின் முடிவில் நாங்கள் தலையிட முடியாது என கூறிவிட்டார். இதனால் மனமுடைந்த பர்சானா சில நாட்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதையடுத்து நடிகர் அஜித்தின் மேலாளர் சுரேஷ் சந்திரா மீது பர்சானா வளசரவாக்கம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.