சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரம்.. முன்னாள் அதிமுக கவுன்சிலருக்கு அக்.11 வரை சிறை
Recommended Video
சென்னை: பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டுள்ள அதிமுக பிரமுகர் ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் வைக்குமாறு ஆலந்தூர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை பல்லாவரத்தை சேர்ந்தவர் சுபஸ்ரீ (23). இவர் பிடெக் படித்துவிட்டு கனடா நாட்டில் மேற்படிப்பு படிக்க விரும்பினார். இதனால் அவர் நுழைவுத் தேர்வு எழுதிவிட்டு முடிவுகளுக்காக காத்திருந்தார். மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்த அவர் கடந்த செப்டம்பர் 12-ஆம் தேதி பணியை முடித்துக் கொண்டு பள்ளிக்கரணை வழியாக இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது பேனர் சரிந்து விழுந்தது.
அப்போது அவ்வழியாக வந்த லாரி அவர் மீது மோதியது. இதில் அவர் பலியானார். இந்த விவகாரம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை அரசியல் கட்சியினரும் சமூக ஆர்வலர்களும் கடுமையாக கண்டித்தனர்.
எதிர்ப்பு
இதையடுத்து லாரி ஓட்டுநரும், பேனரை அச்சடித்தவரும் கைது செய்யப்பட்டனர். ஆனால் பேனர் நபர் அதிமுக நிர்வாகியும் முன்னாள் கவுன்சிலருமான ஜெயகோபாலை கைது செய்யாததற்கு பல்வேறு எதிர்ப்புகள் எழுந்தன.
தேனிகனிக்கோட்டையில் கைது
இந்த நிலையில் இந்த பேனர் வைத்த அதிமுக நிர்வாகி ஜெயகோபாலை போலீஸார் கைது செய்ய வருவதை அறிந்து அவர் நெஞ்சுவலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கிருந்து தப்பிய அவர் தேன்கனிக்கோட்டையில் நேற்றைய தினம் கைது செய்யப்பட்டார். இந்த நிலையில் அவரை ஆலந்தூர் நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தினர்.
சிறை தண்டனை
அப்போது பேனர் வைத்தது தவறுதான் என நீதிமன்றத்தில் ஜெயகோபால் ஒப்புக் கொண்டார். இதையடுத்து ஜெயகோபாலை வரும் அக்டோபர் 11-ஆம் தேதி வரை அதாவது 14 நாட்கள் நீதிமன்றக் காவலில் வைக்குமாறு நீதிபதி ஸ்டார்லி உத்தரவிட்டார்.
4 பேர் கைது
இந்த விவகாரத்தில் பேனரை வைத்த பணியில் ஈடுபட்ட பழனி (50), சுப்பிரமணி (50), லட்சுமிகாந்தன் (38) மற்றும் சங்கர் (35) ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் 4 பேரும் ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.