சென்னை முதலைப் பண்ணையிலிருந்து மாயமான உலகின் மிகப் பெரிய ஆமை
சென்னை: உலகின் இரண்டாவது பெரிய ஆமை இனமான அல்தாப்ரா ஆமை இனத்தைச் சேர்ந்த 55 வயது மதிக்கத்தக்க ஆமை மகாபலிபுர முதலை பண்ணையிலிருந்து மாயமாகியுள்ளது.
சென்னையை அடுத்துள்ள மகாபலிபுரத்தில் முதலை பண்ணை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பல்வேறு வகையான ஆமைகள் மற்றும் முதலைகள் உட்பட நூற்றுக்கணக்கான ஊர்வன வகைகள் உள்ளன.
இந்நிலையில் தற்போது இந்த முதலை பண்ணையிலிருந்து 55 வயது மதிக்கத்தக்க ஆமை திருட்டுப் போகியுள்ளது. சுமார் ஆறு வாரங்களுக்கு முன்பே இந்த திருட்டுச் சம்பவம் நடந்துள்ளது. இருப்பினும், இப்போது தான் இது தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.
இந்த கல்வியாண்டில் பள்ளிகளுக்கு பொது தேர்வு நடத்தப்படுமா? அமைச்சர் செங்கோட்டையன் பதில்
ரூ.10 லட்சம் மதிப்பிலான ஆமை
திருட்டுப்போகியுள்ள இந்த ஆமை உலகின் இரண்டாவது பெரிய ஆமை இனமான அல்தாப்ரா ஆமை இனத்தைச் சேர்ந்தது ஆகும். சர்வதேச கள்ளச் சந்தையில் இந்த ஆமையின் மதிப்பு 10 லட்ச ரூபாய் இருக்கும்.
நள்ளிரவு திருடப்பட்ட ஆமை
இந்தச் சம்பவம் குறித்துக் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து காவல்துறை ஆய்வாளர் வேல்முருகன் கூறுகையில், "இந்தத் திருட்டு சம்பவம் நவம்பர் 11ஆம் தேதி நள்ளிரவு நடந்திருக்கலாம். அவர்கள் அருகிலுள்ள எந்த கண்காணிப்பு கேமராவிலும் சிக்காமல் இந்த திருட்டு சம்பவத்தை மேற்கொண்டுள்ளனர். இந்தத் திருட்டில் ஈடுபட்டவர்கள் மிகவும் கவனமாக இருந்துள்ளனர்" என்றார்.
ஊழியர்களுக்கு தொடர்பு
விசாரணை அதிகாரி இ.சுந்தரவத்தனம் கூறுகையில், "மிகப் பெரிய ஆமை இருந்த இடத்திற்கு அருகில் சி.சி.டி.வி கேமராக்கள் எதுவும் இல்லை. ஆனால் நள்ளிரவில் இந்தப் பண்ணைக்கு வெளியே சிலரது நடமாட்டங்கள் இருந்துள்ளன. மேலும், கிழக்கு கடற்கரை சாலை வழியாகத் திருடர்கள் ஆமையுடன் தப்பியுள்ளனர் என்று நாங்கள் சந்தேகிக்கிறோம்.
ஆமையின் உடலில் மருத்துவ நலன்கள்
இந்தத் திருட்டு சம்பவத்தில் பண்ணையில் இருக்கும் ஊழியர்களுக்குத் தொடர்பு இருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம். அதனடிப்படையில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இந்த ஆமையின் உடல் பாகங்களில் மருத்துவ நலன்கள் இருப்பதாக நம்பப்படுகிறது. அதற்காக இந்த ஆமை திருடப்பட்டிருக்கலாம்." என்றார்.
காணாமல்போன 55 வயது மதிக்கத்தக்க ஆமை
தற்போது காணாமல் போகியுள்ள ஆல்டாப்ரா ஆமை 150 ஆண்டுகள் வரை உயிர் வாழும். 1.5 மீட்டர் நீளத்திற்கு வளரக்கூடிய இந்த ஆமை 200 கிலோ வரை எடை இருக்கும். சென்னை முதலை பண்ணையிலிருந்த இந்த இனத்தைச் சேர்ந்த நான்கு ஆமைகள் இருந்துள்ள. அவற்றில் 55 வயது மதிக்கத்தக்க ஆமை ஒன்று தற்போது திருடப்பட்டுள்ளது. இந்த திருட்டுச் சம்பவம் குறித்து முதலை பண்ணை இயக்குநர் இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.