தமிழகத்தில் மின்கட்டணம் ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் உயரப் போகிறதா... மின்வாரியம் விளக்கம்
சென்னை: தமிழகத்தில் ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் அளவுக்கு மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இந்நிலையில் தமிழகத்தில் மின்கட்டணம் உயர்த்தப்பட வாய்ப்பு இல்லை என்று மின்வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
தமிழகத்தில் மின்கட்டணம் கடைசியாக கடந்த 2014-ம் ஆண்டு மின்கட்டணம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு தமிழக அரசு 30 சதவீதம் வரை மின்கட்டணம் உயர்த்தப்பட உள்ளதாக மின் ஊழியர் மத்திய அமைப்பு (சி.ஐ.டி.யு.) மாநில தலைவர் எஸ்.எஸ்.சுப்பிரமணியன் கூறியிருந்தார். இது தொடர்பாக அவர் செய்திளார்களிடம் பேசுகையில், "தமிழக அரசு இந்த ஆண்டு மின்கட்டணத்தை 30 சதவீதம்வ ரை உயர்த்த திட்டமிட்டுள்ளது இதனால் ரூ.20 ஆயிரம் கோடி அளவுக்கு சாதாரண மக்கள் மீது மின் கட்டண உயர்வு திணிக்கப்படலாம்.
இதன்படி கட்டணம் உயர்த்தப்பட்டால் சாதாரண மக்கள், விவசாயிகள் என அனைத்து தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள். நாடாளுமன்ற தேர்தல் வராமல் இருந்திருந்தால் முன்னரே கட்டணத்தை உயர்த்துவது குறித்த அறிவிப்பை அரசு வெளியிட்டு இருந்து இருந்திருக்கும.. தற்போது நாடாளுமன்ற தேர்தல் முடிந்து விட்டதால், தமிழக அரசு விரைவில் மின் கட்டண உயர்வு தொடர்பான அறிவிப்பை வெளியிட வாய்ப்பு உள்ளது.
பொதுவாக மின் கட்டணத்தை அரசு திட்டமிட்டு இருந்தால், அது தொடர்பாக மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் ஒப்புதல் பெற வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு மின்சார வாரியம், மின்வாரிய ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின் கட்டணத்தை உயர்த்துவது குறித்து ஒப்புதல் பெற்றுவிட்டதாக தகவல்கள் எங்களுக்கு வந்துள்ளது. மின் கட்டணத்தை ஒரு யூனிட்டுக்கு 30 சதவீதம் வரை உயர்த்த அரசு திட்டமிட்டு உள்ளது" என்றார்.
இதற்கு விளக்கம் அளித்த மின்சார வாரியம், மின் கட்டணம் 30 சதவீதம் வரை உயர்த்தப்பட உள்ளதாக சமூக வலைதளங்களில் பரவும் தகவல் உண்மையில்லை என விளக்கம் அளித்துள்ளது.