அதிமுகவில் இரட்டை தலைமை ஏன்... இயக்குவது பாஜகவா.. தங்க தமிழ்ச்செல்வன் சொல்வது உண்மையா?
Recommended Video
சென்னை: உண்மையில் அதிமுகவிற்கு இரட்டை தலைமையா அல்லது பாஜகதான் தலைமையா.. தங்க தமிழ்ச்செல்வன் சொல்வது போல் பாஜகதான் அதிமுகவை இயக்குகிறதா.. அப்படி என்றால் பாஜக தலைமையின் சொல்படி கேட்டு ஆட வேண்டிய அவசியத்தில் அதிமுக இருக்கிறதா என்று பல்வேறு கேள்விகள் எழுகின்றன.
அண்மைக் காலமாகவே அதிமுக தலைமை முன் வைக்கப்படும் குற்றச்சாட்டு என்றால், இரட்டை தலைமை இருப்பதால் முடிவுகளை விரைந்து எடுப்பதில்லை. எடுக்கும் முடிவுகளில் அதிமுக தலைவர்கள் மற்றும் பாஜக தலைவர்களின் தலையிடுகள் இருக்கின்றன என்பது தான்.
அதிமுக கட்சி ரீதியான விஷயங்களில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஒ பன்னீர்செல்வம் ஆகியோர் எடுக்கும் முடிவுகளை கட்சின் செல்வாக்கு மிக்க தலைவர்கள் கேட்பதில்லை என்றும் ஒபிஎஸ் மற்றும ஈபிஎஸ் என இரு பிரிவாக செயல்படுவதால் முடிவுகள் எடுப்பதில் சிரமம் இருப்பதாகவும் பலசமரசங்கள் செய்ய வேண்டியருப்பதாகவும் சொல்லிக்கொள்கிறார்கள்.
பாஜகவே முடிவு
கடந்த லோக்சபா தேர்தலிலும், சட்டசபை இடைத்தேர்தலிலும் அதிமுக தோற்றுப்போனதற்கு இதுவே மிக முக்கிய காரணம் என்றும் சொல்கிறார்கள். கட்சி ரீதியாக இப்படி என்றால் ஆட்சி ரீதியாக அதிமுக அரசு மீது எதிர்க்கட்சிகள் எல்லாம் சேர்ந்து பகீர் குற்றச்சாட்டை முன்வைக்கின்றன. என்னவென்றால், தமிழகத்தில் நடக்கும் நிர்வாக ரீதியான முடிவுகள் எல்லாவற்றிலும் மத்தியில் உள்ள மோடி அரசின் தலையீடு இருப்பதாக சொல்கிறார்கள்.
தங்கம் பகீர் புகார்
அதிமுகவில் நீண்ட காலமாக இருந்து வந்த தங்கதமிழ்செல்வனே பாஜகவின தலையீடு இருப்பதாகவும் பாஜகதான் அதிமுக அரசை இயக்குவதாகவும் பகிரங்கமாக இன்று குற்றம்சாட்டினார். அதிமுக பாஜகவின் சொல்படி கேட்டு நடக்கவேண்டிய அவசியம் என்ன? தன்னுடைய முடிவின்படியே செயல்பட்டு அதிகாரம் மிக்க வலிமையான தலைவராக இருந்த ஜெயலலிதா வழியில் வந்தவர்கள் ஏன் பாஜகவின் சொல்படி கேட்டு செயல்படுகிறார்கள் என்று கேள்வி எழாமல் இல்லை.
அதிமுக அரசு மீது சந்தேகம்
அதிமுக அரசை பற்றி குறை சொன்னால் அதிமுக தலைவர்களைவிட முதல் வரிசையில் நின்று பாஜக மாநில தலைவர் தமிழிசை சவுந்திரராஜனும், முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணனும் பேட்டி கொடுப்பது ஏன்? இவை எல்லாம் பாஜகதான் அதிமுகவை இயக்குகிறது என்பதற்கான சந்தேகத்தை வலுப்படுத்துகிறது.
கடந்து செல்லக்கூடியதல்ல
தமிழகத்தில் ஹைட்ரோ கார்பன், 8வழிச்சாலை, மும்மொழிக்கொள்கை உள்பட பல்வேறு முக்கிய திட்டங்களை நிறைவேற்றுவதற்காக அதிமுக அரசை பொம்மையாக வைத்து பாஜக இயக்கி வருவதாக திமுக குற்றம்சாட்டுவதை சாதாரண குற்றச்சாட்டு அல்ல. இதில் தமிழகத்தின் வாழ்வாதாரங்கள் அடங்கி இருக்கின்றன. அதிமுக தலைவர்கள் மீது உள்ள ஊழல் புகார்கள் காரணமாகவும்,ஆட்சியை காப்பாற்றவதற்காகவுமே பாஜகவுக்கு அதிமுக தலைமை அடங்கி போவதாகவும் திமுக சாடுவது எளிதாக கடந்து செல்லும் குற்றச்சாட்டு அல்ல.
ஒற்றை தலைமை அவசியம்
எனவே இதற்கு எல்லாம் சரியான பதிலாக, மத்திய அரசின் தவறுகளை ஜெயலலிதா வழியில் துணிச்சலாக அதிமுக தலைமை எதிர்க்க வேண்டும். இதேபோல ஒற்றைத் தலைமையின் கீழ் வலிமையாக அதிமுக உடனடியாக மாற வேண்டும். இல்லாவிட்டால் நிச்சயம் மிகப்பெரிய பாதிப்பு அதிமுகவுக்கு வரும் தேர்தலில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. புதிது புதிதாக கட்சிகள் உருவாகி வருகின்றன. இன்றைய சூழலில் ஆட்சியை காப்பாற்றுவது எவ்வளவு முக்கியமோ அதேபோல் அதிமுகவையும் காப்பாற்ற வேண்டிய பொறுப்பு அதிமுக தலைவர்களுக்கு இருக்கிறது..