அனைத்து ஊராட்சிகளிலும் 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும்.. தமிழக அரசு உத்தரவு
சென்னை: மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் வரும் 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது
ஒவ்வொரு ஆண்டும், மே 1ம் தேதி தமிழகத்தில் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படுவது வழக்கம். நடப்பாண்டில் தேர்தல் நடத்தை விதி முறைகள் அமலில் இருந்த காரணத்தால் கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை
இந்நிலையில் தமிழகத்தில் வரும் 28ம் தேதி கிராம சபை கூட்டங்களை நடத்தஅனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி இயக்ககத்தின் இயக்குநர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்
தலைநகர் சென்னையை தவிர்த்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் அனுப்பபட்டுள்ள அறிக்கையில், கடந்த மே 1ம் தேதி தொழிலாளர் தினத்தன்று தேர்தல் நடத்தை விதிமுறை காரணமாக கிராம சபை கூட்டங்கள் நடத்தப்படவில்லை
அப்போது ஒத்திவைக்கப்பட்ட கிராம சபை கூட்டத்தை, வரும் 28ம் தேதி நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது மேலும் அனைத்து கிராம மக்களும் கலந்து கொள்ள ஏதுவாக கிராம சபை கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவற்றை தெரியப்படுத்த வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிராம சபை கூட்டத்தினை ஊராட்சி எல்லைக்குட்பட்ட வார்டுகளில் சுழற்சி முறையை பின்பற்றி வரும் 28-ம் தேதி காலை 10 மணிக்கு நடத்த வேண்டும் அனைத்து ஊராட்சிகளிலும் வரும், 28ம் தேதி கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
28ம் தேதி நடைபெற உள்ள கிராம சபை கூட்டத்தில், ஊராட்சி நிர்வாகம் மற்றும் பொது செலவினம் குறித்து, விவாதிக்க வேண்டும். பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்பட உள்ள, ஊராட்சி வளர்ச்சி பணிகளுக்கான, திட்ட அறிக்கைக்கு, ஒப்புதல் பெற வேண்டும். குடிநீர் சிக்கனம் குறித்து, மக்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும் அரசு அறிவுறுத்தியுள்ளது
குடிநீர் சேமிப்பு மற்றும் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் கிராம சபை கூட்டங்களில் அதை தீர்மானமாக நிறைவேற்ற வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.