ஓபிஎஸ் தலைமையில் அனைத்துக் கட்சிக் கூட்டம்.. முதல்வர் பங்கேற்கவில்லை
சென்னை: அனைத்து கட்சிக் கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பங்கேற்காததால் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் கலந்து கொண்டு கூட்டத்தை நடத்தி வருகிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10 சதவீத இடஒதுக்கீடு வழங்குவது குறித்து விவாதிக்க தலைமைச் செயலகத்தில் இன்று மாலை அனைத்து கட்சிக் கூட்டம் தொடங்கியது.
இந்த கூட்டத்தில் பங்கேற்க 21 கட்சிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இதில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சிக்கு அழைப்பு விடுத்துள்ளனர். எனினும் தினகரன் கட்சியை அழைக்கவில்லை.
முதல்வர் தலைமையில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட இந்த கூட்டத்தில் அவர் பங்கேற்கவில்லை. இதனால் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
இதில் திமுக சார்பில் ஸ்டாலின், பொன்முடி, பாஜக சார்பில் தமிழிசை சவுந்திரராஜன், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், தமிழக காங்கிரஸ் சார்பில் கோபண்ணா, மதிமுக சார்பில் மல்லை சத்யா, விடுதலை சிறுத்தைகள் சார்பில் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றுள்ளனர்.