கறுப்பர் கூட்டம் பற்றி மவுனம்...எந்த முகத்துடன் ஸ்டாலின் வேல் பிடிக்கிறார்...சொல்றது யாருனு பாருங்க!
சென்னை: முருகனின் வேலை எந்த முகத்தை வைத்துக் கொண்டு ஸ்டாலின் தூக்குகிறார் என்று அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா கூறினார்.
இந்துக்கள் வாக்கு வங்கியை மடைமாற்றி எப்படியாவது வாக்குகளை வாங்க துடிக்கும் திமுகவின் எண்ணமே இந்த செயல்கள் என்று அவர் கூறினார்.
இவர்களுக்கு கொள்கை கூறிய வார்த்தை, கட்சியின் நிலைப்பாடு, முன்னோர்கள் வழி பின்பற்றுதல் என எதுவும் கிடையாது என்றும் ராஜேஸ்வரிபிரியா தெரிவித்தார்.
இந்துக்கள் மீது விமர்சனம்
அனைத்து மக்கள் அரசியல் கட்சி தலைவர் மூ.ராஜேஸ்வரிபிரியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
திமுக தலைவர் கருணாநிதி 24.10.02 அன்று சென்னையில் உள்ள ஆண்ட்ரு தேவாலயத்தில் நடந்த கூட்டத்தில் அங்கு கூடியிருந்த கிறிஸ்தவர்களை மகிழ்விக்க இந்துக்கள் என்றால் கள்வர்கள் என்றார். அப்போது அது விமர்சனமானது. அன்று வாக்கு வங்கி வேண்டும் என்பதற்காக ஒரு சாராரை மகிழ்விக்க, மற்றோரு சாராரை அசிங்கப்படுத்தும் இழிவான வார்த்தைகளை கருணாநிதி பயன்படுத்தினார். இன்று அதே தலைவரின் மகன் மு.க.ஸ்டாலின் தி.மு.க. பிரசார கூட்டத்தில் கையில் வேல் பிடித்தபடி நிற்கிறார்.
பணம் சம்பாதிக்க வேண்டும்
பதவி வேண்டும், ஆட்சி வேண்டும், கருணாநிதி இல்லாத முதல் தேர்தலை அவரது மகன் வென்று காட்டினார் என்ற பெருமை வேண்டும், வட்டிக்கு வாங்கி மாவட்டரீதியாக திமுகவை வளர்த்து வரும் நிர்வாகிகள் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தை மனதில் வைத்து திமுக தலைமை இன்று இந்து மக்கள் எங்களுக்கு எதிரியல்ல என்கிறது.
இப்போது வேல் தூக்குகிறார்
திமுகவினர் நெற்றியில் குங்குமத்துடன் வலம் வருகின்றனர். என் மனைவி துர்கா ஸ்டாலின் செல்லாத கோவிலே இல்லை என்கிறார் ஸ்டாலின். 22 ஆண்டுகளாக ஓடாமல் இருந்த விராலிமலை தேரோட்டத்தை நடத்தியதே கருணாநிதிதான் என ஸ்டாலின் சொல்கிறார். இது அனைத்துக்கும் மேலாக, கந்த சஷ்டி கவசத்தை அவமதித்த கறுப்பர் கூட்டத்தை பற்றி அப்போது வாய் திறக்காமல் இருந்துவிட்டு, இன்று முருகப்பெருமானின் வேலை எந்த முகத்தை வைத்துக் கொண்டு தூக்குகிறார் ஸ்டாலின்.
இப்போது கூற முடியுமா?
இந்துக்கள் வாக்கு வங்கியை மடைமாற்றி எப்படியாவது வாக்குகளை வாங்க துடிக்கும் திமுகவின் எண்ணமே மேற்க்கூறிய செயல்கள் ஆகும். இவர்களுக்கு கொள்கை கூறிய வார்த்தை, கட்சியின் நிலைப்பாடு, முன்னோர்கள் வழி பின்பற்றுதல் என எதுவும் கிடையாது. வார்தைக்கு வார்த்தை கருணாநிதி மகன் எனக்கூறி அதை வைத்தே பதவியில் அமர்ந்த மு.க.ஸ்டாலினால், இந்துக்கள் என்றால் கள்வர்கள் என தன் தந்தை கூறிய வார்த்தையை இப்போது கூற முடியுமா? அப்படி கூறிவிட்டதான் தேர்தலை சந்தித்து பாருங்களேன். 5,000 கிராம சபை கூட்டங்கள் கூட்டினாலும், 50 பி.கே.க்களை வைத்த்தாலும் உங்களால் ஆட்சியை நெருங்க கூட முடியாது என்று அறிக்கையில் அவர் கூறியுள்ளார்.