யாரையும் பெயில் ஆக்காதீங்க! 6,7,8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்க உத்தரவு
சென்னை: அனைத்து பள்ளிகளும் 6,7,8-ம் வகுப்பு பயிலும் அனைத்து மாணவ- மாணவிகளுக்கும் கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிக்கல்வித்துறை அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும், அனைத்து மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.
சிறப்பு வகுப்பு வேண்டாம், உறவுகளோடு பழகட்டும்! தனியார் பள்ளிகளுக்கு பள்ளிக்கல்வித்துறை கண்டிப்பு
அந்த சுற்றறிக்கையில், அனைத்து அரசு, அரசு உதவி பெறும், ஆதிதிராவிடர், சமூக நலத்துறை, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் உள்பட அனைத்து பள்ளிகளும், அனைவருக்கும் கல்வி உரிமைச்சட்டம் ஏப்ரல் 2010ன் படி , 6, 7, 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாய தேர்ச்சி அளிக்க வேண்டும். அப்படி அனைவருக்கும் தேர்ச்சி அளிக்காத பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மற்றும் முதல்வர்களே அதற்கான விளைவுகளுக்கு பொறுப்பேற்க வேண்டியது வரும்.
எனவே 6, 7, 8-ம் வகுப்பு தேர்வு முடிவுகளை நெறிமுறைகளை பின்பற்றி, அதை சார்ந்த ஆய்வு அலுவலர்களிடம் ஒப்புதல் பெற்று மே 2 ம் தேதி வெளியிட வேண்டும்.
9ம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகளின் பட்டியல் நகலை உடனடியாக மாவட்ட கல்வி அலுவலருக்கு அனுப்பி வைக்க வேண்டும். மற்றொரு நகலை வினாத்தாள் அமைப்பாளருக்கும் அனுப்பி வைக்க வேண்டும். தேர்வில் தேர்ச்சி அடையாத மாணவ மாணவிகளுக்கு உடனடி தேர்வு ஜுன் மாதம் 3ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.