2வது நாளை எட்டிய ஜாக்டோ, ஜியோ போராட்டம்.. பள்ளிகளை மூடக்கூடாது என உத்தரவு
Recommended Video
சென்னை:ஜாக்டோ-ஜியோ போராட்டம் காரணமாக பள்ளிகளை மூடக்கூடாது என்றும், ஆசிரியர்கள் வராமல் மூடப்பட்ட அனைத்து பள்ளிகளையும் கட்டாயம் திறக்க வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக உத்தரவிட்டுள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டம் உட்பட 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழகத்தில் ஜாக்டோ ஜியோ அமைப்பு சார்பில் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெற்று வருகிறது. அதில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் என 7 லட்சம் பேர் பங்கேற்றுள்ளனர்.
பள்ளிக் கல்வித்துறையை பொறுத்தவரையில் தொடக்கப்பள்ளிகள் அதிகளவு செயல்படவில்லை. பல மாவட்டங்களில் 1-ம் வகுப்பு முதல் 5 வகுப்பு வரை உள்ள தொடக்கப்பள்ளி ஆசிரியர்களும், 1 முதல் 8-ம் வகுப்பு வரை உள்ள நடுநிலைப் பள்ளி ஆசிரியர்களும் வேலைநிறுத்தத்தில் அதிகளவு பங்கேற்றதால் மாணவர்கள் பாதிக்கப்பட்டனர்.
பள்ளிகள் மூடப்பட்டன
ஆசிரியர்கள் பணிக்கு வராததால் ஒரு சில பள்ளிகள் மூடப்பட்டன. சில இடங்களில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாததால் மாணவர்களே பாடம் நடத்தினார்கள். அரசு ஊழியர்கள் இல்லாததால் வருவாய்த்துறை, வணிக வரித்துறை, ஊரக வளர்ச்சி துறை என பல அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப் பட்டன.
வெறிச்சோடிய அலுவலகங்கள்
சென்னையிலும் எழிலகம், பனகல் பூங்கா உள்ளிட்ட பகுதிகளில் அரசு துறை அலுவலகங்கள் ஊழியர்கள் இல்லாமல் வெறிச்சோடின. அரசு ஊழியர்கள் போராட்டத்தால் பணிகள் முடங்கின. பள்ளி மாணவர்களும் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போராட்டம் 2வது நாளாக நீடிப்பு
இந்த நிலையில் இன்று 2-வது நாளாக அரசு ஊழியர்-ஆசிரியர்கள் போராட்டம் நீடிக்கிறது. தமிழகம் முழுவதும் 300 இடங்களில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அனைத்து மாவட்டத்திலும் தாலுகா அலுவலகங்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள் முன்பு கூடி கோரிக்கைகளை வலியுறுத்தி சாலையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் செய்தனர்.
அவதியுறும் மாணவர்கள்
ஆசிரியர்கள் போராட்டத்தால் 80 சதவீதம் அரசு பள்ளிகள் மூடப்பட்டிருந்தன. விழுப்புரம், கடலூர், திருப்பூர் உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள் மூடப்பட்டதால் மாணவர்கள் அவதிக்குள்ளாகினர்.
பணிக்கு திரும்ப வேண்டுகோள்
மாணவர்களின் நலன் கருதி அரசு பள்ளி ஆசிரியர்கள் போராட்டத்தை விலக்கி கொண்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார். இந் நிலையில், போராட்டம் காரணமாக அரசு பள்ளிகளை மூடக்கூடாது என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
பள்ளிகள் திறப்பு,உறுதி
மேலும் பள்ளிகளில் பணிபுரியும் சத்துணவு அமைப்பாளர்கள் பள்ளிகளை திறந்து வைத்து பள்ளி செயல்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. ஆசிரியர்கள் பற்றாக்குறையை சமாளிக்க, ஆசிரியர் பயிற்சி பள்ளியில் படிக்கும் மாணவர்களை கொண்டு பள்ளிகளை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.